சீனாவுக்கு பை… இந்தியாவுக்கு ஹாய்! – ஜப்பான் முதலீட்டாளர்கள் முடிவு

டோக்யோ: ஜப்பானிய முதலீட்டு நிறுவனங்களை ஈர்ப்பதில் சீனாவை ஓரங்கட்டிவிட்டது இந்தியா.

இன்றைய தேதிக்கு தொழில் தொடங்க ஜப்பானிய நிறுவனங்களின் முதல் சாய்ஸ் இந்தியாதான்.

இந்தியா – சீனா இரு நாடுகளிலுமே மார்க்கெட் பொருளாதார முறை அமலுக்கு வர ஆரம்பித்தது 1992-ம் ஆண்டு முதல்தான். தாராளமயம் என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்க ஆரம்பித்தன இரு நாடுகளும். யார் அதிக முதலீட்டாளர்களை ஈர்ப்பது என்பதில் பெரும் போட்டியே நிலவியது. சலுகைகளை அள்ளி வழங்கின.

சர்வதேச பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கும் ஜப்பானின் நிறுவனங்கள் தங்களது நேரடி முதலீட்டுக்கு ஏற்ற நாடாக சீனாவையே கருதி வந்தனர்.

ஆனால் சமீபத்திய ஆய்வின்படி, ஜப்பானிய நிறுவனங்களைக் கவர்வதில் இப்போது சீனாவை விட இந்தியாவே முதலிடத்தில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

சீனாவில் நிலவும் ஜப்பானிய விரோதப் போக்கு மற்றும் தொழிலாளருக்கான சம்பளப் பிரச்சினைகள்தான் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அடுத்த பத்தாண்டுகளில் தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடு எது என்று 605 ஜப்பானிய நிறுவனங்களிடம் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில், 74.9 சதவீத நிறுவனங்கள் இந்தியாதான் என பதிலளித்துள்ளன. ஆனால் குறுகிய கால முதலீடு என்று வரும்போது சீனாவை 77.3 சதவீதத்தினரும், இந்தியாவை 61 சதவீதத்தினரும் தேர்வு செய்துள்ளனர்.

வியட்னாம் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *