சென்னை: அரசு மானியம் பெற்றுவரும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினரல்லாத தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக 6456 ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்படும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்து ஸ்டாலின் பேசியதாவது:
`கனவு மெய்ப்பட வேண்டும் என்று பாரதி பாடினான். ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு உண்டு’என்று தொடங்கி ஒவ்வொரு தரப்பினரின் கனவு குறித்து பேசினார். அவர் கூறியதாவது:
அலெக்சாண்டர் கனவு கண்டார், அது அவரை அகிலத்தின் மாவீரனாக்கியது; காந்தியடிகள் கனவு கண்டார், அது அவரை இந்திய நாட்டின் தந்தையாக்கியது; பண்டித நேரு கனவு கண்டார், அது அவரை ஆசிய ஜோதியாக்கியது; அம்பேத்கர் கனவு கண்டார், அது அவரை ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலனாக்கியது; பெரியார் கனவு கண்டார், அது அவரை நாத்திகராக்கியது; காமராஜர் கனவு கண்டார், அது அவரை கல்விக் கண் திறந்த பெருந்தலைவராக்கியது; அண்ணா கனவு கண்டார், அது அவரை அனைவருக்கும் அன்பான அண்ணனாக்கியது,
அதுபோல ஐந்தாவது முறையாக ஆட்சிபீடம் ஏறி ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும், நம்முடைய முதல்வர் கருணாநிதிக்கும் கனவொன்று உண்டு. பசியும், பிணியும் அற்ற தமிழகமாக, கல்வியில் சிறந்த தமிழகமாக, உழவில் உயர்ந்த தமிழகமாக, தொழிலில் சிறந்த தமிழகமாக, செம்மொழியாம் தமிழ் மொழி மீது தனியாத பற்று கொண்ட தமிழகமாக தமிழ்நாடு ஆக வேண்டும் என்கிற கலையாத கனவு அவருக்கு உண்டு. அந்தக் கனவை நனவாக்கும் சாதனைகளின் தொடர்ச்சியே இந்த ஆளுநர் உரை.
மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரி என்பது இந்த அரசின் நோக்கம். நிதி உதவி, இடவசதி போன்ற பல்வேறு அடிப்படையில் படிப்படியாக இந்த திட்டத்தை அரசு நிறைவேற்றி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் கருணாநிதி நிச்சயம் மருத்துவ கல்லூரிகளை அமைப்பார். எனினும் கவர்னர் உரையில் ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும் என குறிப்பிட்டிருந்தோம்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த புதுக்கோட்டை மாவட்டத்திலும், கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த விருதுநகர் மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற கட்சித்தலைவர் சிவபுண்ணியம் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் திருத்துறைப்பூண்டியில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கிட அனுமதித்துள்ளார். ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட 5 கல்லூரிகளோடு இந்த கல்லூரியையும் சேர்த்து 6 கல்லூரிகள் இந்த அரசால் தொடங்கப்படும்.
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், பணியின் போது இறந்தால் மட்டுமே, விபத்து உதவித் தொகை ரூ.1 லட்சம் கிடைக்கின்ற நிலையை மாற்றி, இவர்கள் எவ்வித விபத்தின் மூலம் இறந்தாலும், அந்த குடும்பத்திற்கு நிவாரண தொகை ரூ.1 லட்சம் வழங்கப்படும். நல வாரியத்தில், 5 வருடங்கள் தொடர்ந்து உறுப்பினராக இருந்து, 60 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு மட்டுமே, ஓய்வூதியம் வழங்கும் நிலையை மாற்றி, பதிவு செய்து 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். நல உதவிகள் பதிவு செய்து ஓராண்டு கழிந்த பிறகு தான் என்ற நிலையை மாற்றி, உறுப்பினர்கள் பதிவு செய்த நாள் முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
1990-91 வரை தொடங்கப்பட்டு அரசு மானியம் பெற்றுவரும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினரல்லாத தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கைப்படி கூடுதலாக தேவைப்படும் சுமார் 6456 ஆசிரியர் பணியிடங்களை அரசு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவிற்கு இப்பள்ளிகள் கூடுதல் நிதி உதவி பெறும்.
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்கும் பணியினை மேற்கொள்ளும் பகுதி நேரபணியாளர்களுக்கு தற்போது மாதம் ரூ.1510 வழங்கப்பட்டு வருகிறது. 1.1.2011 முதல் தொகுப்பூதியம் ரூ.2000 என நிர்ணயித்து வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 40,000 பேர் பயன் பெறுவர்.
மத்திய அரசு வழங்குவது போல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் 80-84 வயது உள்ளவர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம் உயர்த்தவும், 85-89 வயது வரை 30 சதவீதம் உயர்த்தவும், 90-94 வயது வரை 40 சதவீதம் உயர்த்தவும், 95-99 வயது வரை 50 சதவீதம் உயர்த்தவும், 100 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 100 சதவீதம் உயர்த்தி இதற்குரிய ஆணை வெளியிடப்படும். இதன் மூலம் சுமார் 40,000 ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள்.
எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெயக்குமார் தொடக்கத்தில், இந்த ஆளுநர் உரையைப் பார்த்து நாடே சிரிக்கிறது என்றார். யார் சிரிக்கிறார்கள் என்று எங்களுக்கு புரியவில்லை. ஒருவேளை அது அவருடைய கோளாறாகக்கூட இருக்கலாம். வேண்டுமென்றால் கலைஞர் காப்பீட்டு திட்டத்திலே நாங்கள் பரிந்துரை செய்து, அவருக்கு சிகிச்சை அளிப்பதற்குக்கூட தயாராக இருக்கிறோம். இந்த ஆளுநர் உரையென்பது வெறும் காகிதம் அல்ல, இது ஒரு காலக் கண்ணாடி. நான்கரை ஆண்டு சாதனைகளுக்கான நற்றமிழ்ச் சான்று. இனி ஆற்ற இருக்கக்கூடிய பணிகளுக்கான அறிமுகம். இந்த உரையில் இருப்பவை வெறும் சொற்கள் அல்ல. இந்த அரசினுடைய முன்னேற்றத்தை குறிக்கக்கூடிய மைல்கற்கள்.
ஆளுநர் உரையைப்பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த உறுப்பினர் நல்லக்கண்ணு சொல்கின்றபோது, வரக்கூடிய தேர்தலை கருத்திலே கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கக் கூடிய தேர்தல் அறிக்கை என்று குறிப்பிட்டிருக்கிறார். உள்ளபடியே இது எங்களுக்கு மகிழ்ச்சிதான். நாட்டிலே இன்றைக்கு தேர்தல் களத்திலே போட்டியிடக்கூடிய கட்சிகள் எல்லாம், தேர்தல் நேரத்திலே வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை வழங்குவதுண்டு. அது வழக்கம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதைச் செய்வோம், இதைச் செய்வோம், வானத்தை கிழிப்போம், வைகுண்டத்தை காட்டுவோம், மணலைக்கட்டி கயிறாக்குவோம் என்ற நிலையிலே சொல்லக்கூடிய உறுதிமொழிகள் எல்லாம் உண்டு. ஆனால். அதற்கெல்லாம் நேர்மாறாக, விதிவிலக்காக தேர்தல் நேரத்தில் வழங்குகின்ற உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றி காட்டியிருக்கக்கூடிய ஆட்சிதான் கருணாநிதி தலைமையில் அமைந்திருக்கக்கூடிய ஆட்சி என்பதை நாடு நன்றாக உணர்ந்திருக்கிறது.
ஆக, 2011ம் ஆண்டிலும் மீண்டும் திமுகழகம்தான், இந்த ஆட்சிதான் மீண்டும் பொறுப்பேற்க இருக்கிறது என்பதற்கு அவர்களே சான்று வழங்கியிருக்கிறார்கள் என்றுதான் நான் நம்புகிறேன். தேர்தல் அறிக்கையைப் பற்றி நான் குறிப்பிட்டு சொல்கிறபோது, `யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பதுபோல, `தேர்தல் அறிக்கை வரும் பின்னே, ஆளுநர் உரை வந்திருக்கிறது முன்னே’ என்பதையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
Leave a Reply