2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலிகளின் குரல் வானொலிச் சேவைக்கான உபகரணங்களை இறக்குமதி செய்ய நோர்வேயிடம் உதவி கோரியதாக விக்கிலீக்ஸ் தளத்தினை ஆதாரமாகக் காட்டி நோர்வேயின் அப்டன் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தகவல் பரிமாற்றக் குறிப்புகளில் இந்த விபரம் இடம்பெற்றுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
2002 டிசம்பர் 20ம் திகதியிடப்பட்ட இந்தத் தகவல் பரிமாற்றக் குறிப்பில், சிறிலங்கா அரசாங்கம் தமது தூதுரகத்திடம் இந்த வேண்டுகோளை விடுத்ததாக நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்பேர்க் எம்மிடம் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் ஒலிபரப்பு ஒழுங்குமுறையின் கீழ் செயற்படுவதற்கான இணக்கப்பாடு ஒன்றின் அடிப்படையிலேயே இந்த கருவிகளை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் நோர்வேயின் உதவியை நாட்டியது.
ஆயினும் இந்த உதவியை நேரடியாகப் புலிகளுக்கு செய்ய முடியாது என்றும் சிறிலங்கா அரசின் சமாதான செயலகத்திடமே வழங்க முடியும் என்றும் நோர்வே கூறியது.
இந்தக் கருவிகள் கப்பல் மூலம் கொழும்புத் துறைமுகத்துக்கு ஒரு கொள்கலனில் கொண்டு வரப்பட்டன.
நோர்வே தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட இந்தக் கொள்கலன் சுங்கவரி செலுத்தப்படாமலேயே கொண்டு செல்லப்பட்டது.
நோர்வே தூதுரகம் இதை சிறிலங்கா அரசின் சமாதான செயலகத்திடம் கையளிக்க, பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் புலிகளுக்கு அனுப்பப்பட்டது.
புலிகளின் குரல் வானாலியை சட்டபூர்வமானதாக்கும் நோக்கிலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
அப்போது புலிகளின் குரல் வானொலி குறைந்த சக்தி கொண்ட பண்பலை ஒலிபரப்பையே மேற்கொண்டு வந்தது.
புதிதாகப் பெற்ற கருவிகளின் மூலம் புலிகளின் குரல் வானொலியை வடக்கு,கிழக்குப் பகுதிகளில் செவிமடுக்க முடியும்.
இந்த ஒலிபரப்புக் கருவிகளின் பெறுமதி சுமார் 90 ஆயிரம் டொலர் என்றும் அவை சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை இந்திய அரசாங்கம் இந்தக் கருவிகளைக் கொண்டு தமிழ்நாடு வரை புலிகள் தமது ஒலிபரப்பை மேற்கொள்ள முடியும் என்று சிறிலங்கா அரசிடம் கவலை தெரிவித்தது.
புதிய கருவிகளின் தூரவீச்சுத் தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லை.
இந்த விவகாரம் வெளியான போது சிறிலங்கா அரசுக்கு ஜேவிபி கடும் கண்டனத்தை வெளியிட்டது.“ என்றும் அந்தத் தகவல் பரிமாற்றக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
Leave a Reply