மதுரை:இரண்டு மாதங்களில் மதுரை, நெல்லையில், ‘பாஸ்போர்ட் சேவை மையங்கள்’ துவக்கப்பட உள்ளன.மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலக எல்லைக்குள், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வருகின்றன.
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர், தென் மாவட்டங்களில் அதிகம் என்பதால், மதுரை பாஸ்போர்ட் அலுவலகம், கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, மதுரை மற்றும் நெல்லையில், ‘பாஸ்போர்ட் சேவை மையங்களை’ துவக்க, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்தது. இன்னும் இரண்டு மாதங்களில் மையங்களை துவக்கும் வகையில் பணிகள் நடக்கின்றன.புதிய மற்றும் பாஸ்போர்ட் புதுப்பிப்புக்கான விண்ணப்பம் பெறுவது, உடன் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களை சரி பார்ப்பது, கட்டணம் பெறுவது ஆகிய பணிகள், இம்மையங்களில் நடக்கும். ஆவணங்களை இரண்டாவதாக சரி பார்க்கும் ஊழியர், மதுரை மண்டல அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படுவார்.
அங்கு பெறப்படும் விண்ணப்பங்கள், கம்ப்யூட்டரில், ‘ஸ்கேன்’ செய்யப்பட்டு, மதுரை அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.போலீஸ் சரி பார்ப்புக்குப் பின், புதிய பாஸ்போர்ட் புத்தகத்தை மதுரை அலுவலகம், விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கும்.ஆவணங்களில் சந்தேகம் இருந்தால் மட்டும், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர், மதுரை அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்படுவார்.இம்மையங்களின் எல்லைகள் இன்னமும் வகுக்கப்படவில்லை. இப்போதைக்கு எந்த மாவட்டத்தில் இருந்து வந்தாலும், இம்மையங்கள் விண்ணப்பங்களை பெறும்.
Leave a Reply