வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள கறுப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட கோரும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்தியாவைச்சேர்ந்த வரி ஏய்ப்பு புள்ளிகளும், ஹவாலா முதலைகளும் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்பட பல வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். சுமார் 70 லட்சம் கோடி ரூபாய் இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படியும், கறுப்பு பணத்தை டெபாசிட் செய்துள்ளவர்களின் விவரத்தை பகிரங்கமாக வெளியிடும்படியும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், சர்வதேச ஒப்பந்தப்படி அந்த விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு மறுத்து வருகிறது. நேற்று முன்தினம்கூட மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி இதுபற்றி கூறுகையில், வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை டெபாசிட் செய்துள்ளவர்களின் விவரத்தை வெளியிட முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. முன்னாள் மத்திய மந்திரி ராம் ஜெத்மலானி எம்.பி, பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜி.பி. கே.பி.எஸ்.கில், பாராளுமன்ற முன்னாள் பொதுச்செயலாளர் சுபாஷ் காஷ்யப் ஆகியோர் இந்த வழக்குகளை தொடர்ந்து உள்ளனர்.
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. சாக்கு போக்கு சொல்லி மத்திய அரசு இழுத்தடிக்கிறது. நாட்டின் சொத்தை கொள்ளையடித்தவர்களுக்கு மத்திய அரசு கேடயமாக செயல்படுகிறது. ஆகவே கறுப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த வழக்குகளில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
நீதிபதிகள் பி.சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த முறை நடந்த விசாரணையின்போது, நீதிபதிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் பற்றிய விவரத்தை வெளியிட மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்? வெளிநாட்டு ஒப்பந்தங்களுக்குள் செல்ல நாங்கள் விரும்பவில்லை.
தேவையானால் விசாரணை வரம்பை விரிவு படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. மத்திய அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு தலைமை ஆணையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
அவர் கேரளாவில் உணவுத்துறை செயலாளராக பணியாற்றியபோது, பாமாயில் இறக்குமதி செய்ததில் ரூ.2 கோடியே 80 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட காரணமாக இருந்தார். இதனால் அவர் மீது ஊழல் வழக்கு நடந்து வருகிறது. ஆகவே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் லிண்டோ சார்பிலும், பொது நல வழக்குக்கான ஒரு தன்னார்வ அமைப்பு சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையும் இன்று நடக்கிறது.
Leave a Reply