மனதுக்கு ஆர்வத்தை தூண்டி, மகிழ்ச்சியையும், பணி திருப்தியையும் தருவது பத்திரிக்கையாளர் பணி. மேலும் தனி அந்தஸ்தைக் கொண்ட பணியாகவும் இது விளங்குகிறது.
சமூகத்தில் நிகழும் சம்பவங்களை சேகரித்து, அதை மக்களிடம் பரப்பும் பெரும் பணியை பத்திரிக்கையாளர்கள் செய்கிறார்கள். ஊடகத்துறை, அச்சு ஊடகம் மற்றும் எலக்ட்ரானிக் ஊடகம் என்ற இரு பெரும் பிரிவுகளாக உள்ளது. இந்த இரு பிரிவுகளிலும் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.
பத்திரிக்கையாளர் தொழிலுக்கு தேவைப்படும் மனோநிலை, பண்பு மற்றும் பொறுப்பு ஆகியவைப் பற்றியும் விரிவாக அலசலாம்.
தனிப்பட்ட பண்புகள்:
ஒருவர் நல்ல பத்திரிக்கையாளராக இருக்க வேண்டுமெனில், அவருக்கு ஆர்வம், நெகிழ்வுத்தன்மை, நல்ல ஆளுமை, தெளிவான சிந்தனை, செய்தித்தாள், வார இதழ் போன்றவற்றில் நல்ல மொழியில் எழுதும் திறன் போன்றவை இருக்க வேண்டும். எது குறித்தும் விமர்சனம் செய்யும் அளவிற்கு மனப்பாங்கு உடையவராகவும் இருத்தல் வேண்டும். இந்த துறையில் தேவைப்படும் இன்னொரு முக்கிய திறன் என்னவெனில், எது ஒரு செய்தி மற்றும் எது ஒரு செய்தியல்ல என்று பிரித்தறியும் திறன்தான்.
உங்களை சுற்றி மற்றும் தொலைவில் என்ன நடக்கிறது என்பதை பற்றிய ஆர்வம், கவனிப்பு மற்றும் விழிப்புணர்வு போன்றவையும் முக்கிய தகுதியாகும். மேலும் மனித இனத்தின்பாலான உங்களின் அன்பு, சமூகத்தின் மீதான அக்கறை, தேசப்பற்று போன்றவற்றை முறையாக வெளிப்படுத்துவதும் உங்களின் மதிப்பினை கூட்டும்.
பணி பொறுப்பு:
* மக்களிடம் பேசி அவர்களை பேட்டி எடுப்பதன் மூலமும், சம்பவங்களை தொகுப்பதன் மூலமும் ஒரு பத்திரிக்கையாளர் செய்திகளையும், தகவல்களையும் பெற வேண்டும்.
* ஒரு கட்டுரைக்கான பின்னணி தகவலை அமைப்பதற்கு, அதுசம்பந்தமான ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
* ஒரு செய்தி அல்லது கட்டுரையை வெளியிடும் முன்பாக அதை மதிப்பிட வேண்டும் அல்லது தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
* பிரவுச்சர், செய்தி கடிதங்கள் மற்றும் அறிக்கைகளை எழுதவும், திருத்தவும் வேண்டும்.
* உரைகளை எழுத வேண்டும் மற்றும் மீடியா வெளியீடுகளை தயாரிக்க வேண்டும்.
பணி வகைகள்:
ஒரு தரமான செய்தித்தாளை வெளியிடும் நிறுவனம் என்னென்ன வகையான பொறுப்புகளில் ஆட்களை வைத்திருக்கும் என்ற விரிவான அலசல் தரப்பட்டுள்ளது.
செய்திக் குழு:
முதன்மை செய்தி ஆசிரியர்:
ஒட்டுமொத்த செய்திக் குழுவின் தலைவர் இந்த முதன்மை செய்தி ஆசிரியர்தான். அனைத்து செய்தி அம்சங்களையும் சேகரித்தல், தேர்ந்தெடுத்தல் மற்றும் வழங்குதல் போன்ற அனைத்து வேலைகளையும் அவர் மேற்பார்வை செய்கிறார். முதன்மை செய்தி ஆசிரியர் என்பவர் பட்டதாரியாக இருப்பது மட்டுமின்றி, அனுபவம் மற்றும் ஆர்வத்தின் மூலமாக நன்கு படித்த நபராகவும் இருக்க வேண்டும்.
செய்தி ஆசிரியர்கள்:
முதன்மை ஆசிரியரின் வலது கையாக இருப்பவர் இந்த செய்தி ஆசிரியர். அடுத்த நாள் செய்தித்தாள் பதிப்பில் வரக்கூடிய செய்திகள் எவை என்பதை சேகரித்து முடிவு செய்வது இவரின் முக்கியப் பணி. இந்த பதவியைப் பெற ஒருவர் பட்டதாரியாகவும், போதுமான பணி அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
துணை ஆசிரியர்கள் மற்றும் முதன்மை உதவி ஆசிரியர்கள்:
இவர்களின் பணி செய்தி ஆசிரியர்களின் பணியை ஒத்தது, அதேசமயம் ஒரு எல்லைக்கு உட்பட்டது. இந்த பணியில் சேர்வதற்கு ஒருவர் பட்டதாரியாகவும், போதுமான அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
உதவி ஆசிரியர்கள்:
ஒவ்வொரு செய்தித்தாள் அலுவலகத்திலும் கணிசமான அளவில் உதவி ஆசிரியர்கள் இருப்பார்கள். ஒரு செய்தியின் மொழிநடையை சிறப்பாக்கி, பிழைகளை சரிப்படுத்தி, தேவையற்றப் பகுதிகளை நீக்கும் வேலையை உதவி ஆசிரியர் செய்வார். அவர் ஷிப்ட் முறையில் பணிபுரியவும் தயாராக இருக்க வேண்டும்.
நிருபர்கள் மற்றும் சிறப்பு செய்தி வழங்குனர்கள்:
ஒரு செய்தித்தாளின் கண்கள் மற்றும் காதுகளாக நிருபர்கள் கருதப்படுகிறார்கள். செய்திகளை மோப்பம் பிடிக்கும் திறமை அவரிடம் இருக்க வேண்டும். அவர் பிறருடன் எளிதில் நெருங்கிப் பழகும் தன்மை உள்ளவராகவும், பல நிலைகளிலிருந்து செய்திகளைப் பெரும் வகையில் ஆட்கள் தொடர்புடையவராகவும் இருக்க வேண்டும். நிருபருக்கு நன்றாக எழுதும் திறமையும் இருக்க வேண்டும்.
வானொலி மற்றும் தொலைக்காட்சி துறை:
சாத்தியப்பட்ட இடத்திற்குள் நுட்பத்தை கொண்டுவருவதே இத்துறைகளுக்கு தேவைப்படும் முக்கிய திறமையாகும். வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நிருபராக இருப்பவருக்கு சிறப்பான எழுத்து திறன் இருக்க வேண்டும்.ஒரு தொலைக்காட்சி நிருபர் அடிக்கடி கேமராவுடனும், குழுவுடனும் பயணம் செய்ய வேண்டியுள்ளது. செய்தி கொடுக்க வேண்டிய விஷயத்தை தேர்ந்தெடுப்பது, பின்னணியை தேர்ந்தெடுப்பது, செய்தி எழுதுதல் மற்றும் செய்தியை கேமராவில் கொண்டு வருதல் ஆகியவற்றுக்கு அவர்தான் பொறுப்பு.
இத்துறையில் கிடைக்கும் சம்பளம்:
ஊடகத் துறையில் பொதுவாக நல்ல சம்பளம் தரப்படுகிறது என்றாலும், சம்பள விகிதம் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. பெரிய நகரங்களில் பணிபுரியும் பயிற்சி காலத்திலுள்ள ஊடகவியலாளர் 6 மாதங்கள் முடிந்த பிறகு ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை பெறுகிறார்கள். பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு துணை ஆசிரியர் மற்றும் சீனியர் நிருபர் ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை பெறுகிறார்கள். தேசிய நாளிதழ்களில் பணிபுரியும் செய்தி ஆசிரியர்கள் ரூ.1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை மாத ஊதியமாக பெறுகிறார்கள்.
ஊடகம் சம்பந்தமாக இருக்கும் படிப்பின் வகைகள்:
* ஜர்னலிசம்/மாஸ் கம்யூனிகேஷன் துறையில் இளநிலை பட்டப் படிப்பு
* பி.ஏ.(ஹானர்ஸ்) ஜர்னலிசம்
* 3 வருட பி.ஏ.(ஹானர்ஸ்) ஹிந்தி பத்ரகரிதா
* பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் ஜர்னலிச சான்றிதழ் படிப்புகள் (பள்ளி படிப்பிற்கு பிறகு)
* எம்.ஏ. ஜர்னலிசம்/மாஸ் கம்யூனிகேஷன்
Leave a Reply