ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்: சொல்கிறார்கள் பிரிட்டன் விஞ்ஞானிகள்

posted in: உலகம் | 0

லண்டன்: பிரிட்டன் விஞ்ஞானிகள், தாங்கள் உருவாக்கி வரும் செயற்கை பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவும், விலை குறைவாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இயற்கையில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மூலம் உருவாக்கப்படும் பெட்ரோலின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பெட்ரோலுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி வருகிறது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், பெட்ரோலுக்கு மாற்றாக, செயற்கை பெட்ரோலை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

இதுகுறித்து, விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் ஸ்டீபன் பெனிங்டன் கூறியதாவது: இயற்கையில் கிடைக்கும் கச்சா எண்ணெயைக் கொண்டு பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. ஆனால், நாங்கள் ஹைட்ரஜனை மையமாகக் கொண்டு செயற்கை பெட்ரோலை உருவாக்கி வருகிறோம். இது இயற்கையான பெட்ரோலை விட மூன்று மடங்கு சக்தி கொண்டதாக இருக்கும். மேலும், இதனால், சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதமான பாதிப்பு ஏற்படாது. எங்களின் செயற்கை பெட்ரோலை பயன்படுத்தி, இருசக்கர வாகனங்கள், கார், பஸ் மற்றும் விமானங்களையும் இயக்க முடியும். சுற்றுச்சூழலுக்கு நண்பனாக இருக்கும் இந்த பெட்ரோல் 14 ரூபாய்க்கே கிடைக்கும். அடுத்த ஆண்டு இந்த பெட்ரோலை பயன்படுத்தி வாகனங்களை சோதனை அடிப்படையில் இயக்க திட்டமிட்டுள்ளோம். இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இந்த பெட்ரோல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வரும். இவ்வாறு ஸ்டீபன் பெனிங்டன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *