சுப்பிரமணியசாமி மனு – தி.மு.க., அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி?

posted in: அரசியல் | 0

முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர, அனுமதி கேட்டு தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவிடம் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மனு கொடுத்திருப்பது, முதல்வரின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே தமிழக அரசியலில் கருதப்படுகிறது.

வரப் போகும் சட்டசபை தேர்தலில் அரசின் சாதனைகளை சொல்லி அமோக வெற்றி பெறலாம் என்றே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தி.மு.க.,வினர் எண்ணியிருந்தனர். ஆனால், சமீபத்தில் எழுந்த, “ஸ்பெக்ட்ரம்’ பூகம்பம் தி.மு.க.,வின் எண்ணத்தை தலைகீழாக மாற்றும் வகையில் தேசிய அளவில் தி.மு.க.,வின், “இமேஜ்’ மளமளவென சரிய காரணமாக அமைந்து விட்டது. “ஸ்பெக்ட்ரம்’ பிரச்னையில் இருந்து தி.மு.க., மீள்வதற்குள், அடுத்த பிரச்னையாக, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவை சந்தித்து, முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர அனுமதி கேட்டுள்ளார். “அரசு விருப்புரிமை’ என்ற பெயரில் சட்ட விதிகளை மீறி தி.மு.க., அரசு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு நிலம், வீடுகளை ஒதுக்கீடு செய்துள்ளது’ என்பதே சு.சாமி கூறியுள்ள குற்றச்சாட்டு. இதற்கு, சட்டசபையில் முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். “விருப்புரிமை ஒதுக்கீட்டால் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை’ என அவர் கூறியுள்ளார். இது, கடந்த ஆட்சியிலேயே இருந்த நடைமுறை என்று கூறி, பலன் பெற்றவர்களின் பட்டியலையும் வாசித்துள்ளார். “சு.சாமி கொடுத்துள்ள மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது. அது, தி.மு.க.,வை பாதிக்கும் அளவுக்கு பெரிய பிரச்னை அல்ல’ என்று தி.மு.க.,வின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவைப் பொறுத்தமட்டில், தி.மு.க., அரசுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி இருந்தபோதே, கருணாநிதியின் முயற்சியால், 2004ம் ஆண்டு தமிழக கவர்னராக கொண்டு வரப்பட்டவர். பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு, தொடர்ந்து தமிழகத்தில் கவர்னராக இருந்து வருகிறார். அவர் வழக்கு தொடர அனுமதி அளிக்க மாட்டார் என்பது ஆளுங்கட்சியினரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அரசியல் ரீதியாக பலர் மனுக்களை அளிப்பதுண்டு. அவை, பத்தோடு பதினொன்றாக குப்பைக்கு போய் சேரும். ஆனால், சு.சாமி அப்படி சாதாரணமாக விட்டுவிடும் ஆள் இல்லை என்பது அவரது நடவடிக்கைகளை கூர்ந்து கண்காணிப்பவர்கள் அறிவர். அவர் கொடுத்துள்ள மனு மீது கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, “நான் கொடுத்த மனு மீது கவர்னர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்’ என்று கேள்வி கேட்டு வழக்கு தொடரவும் தயங்க மாட்டார். அதனால், அரசு மீது கவர்னரை கொண்டு உறவின் அடிப்படையிலும், அவர் கொண்ட நல்லெண்ணத்தின் அடிப்படையில் மட்டுமே அவர் அனுமதி அளிக்க மாட்டார் என்று ஆளுங்கட்சியினர் நம்புகின்றனர். இந்த நல்லெண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, அரசியல் நெருக்கடி மற்றும் கோர்ட் வழக்குகளின் காரணமாகவோ எந்த நேரமும் இந்த மனு உயிர் பெற்று எழ வாய்ப்பு உண்டு என்பதால், சு.சாமி கொடுத்துள்ள மனு தி.மு.க., அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே கருதப்படுகிறது.

முன்மாதிரிகள்…: இதற்கு முன், 1995ல், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, “டான்சி’ ஊழல் குறித்து சு.சாமி கொடுத்த மனுவின் அடிப்படையில், கவர்னராக இருந்து சென்னாரெட்டி வழக்கு தொடர அனுமதி அளித்தார். கர்நாடக கவர்னர் பரத்வாஜ், இரண்டு வக்கீல்கள் கொடுத்த மனுவின் அடிப்படையில், அம்மாநில முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர சமீபத்தில் அளித்தார். கடந்த 1997ல், பீகார் மாநில முதல்வராக லாலுபிரசாத் யாதவ் இருந்தபோது, அவர் மீது வழக்கு தொடர ஏ.ஆர்.கித்வாய் அனுமதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *