பெங்களூரில் சர்வதேச விமான திருவிழா: 5 நாட்கள் நடக்கிறது

posted in: மற்றவை | 0

ஆசியாவின் மிகப்பெரிய விமான திருவிழாவாக கருதப்படுவது “ஏரோ இந்தியா” என்ற சர்வதேச விமான கண்காட்சியாகும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை விமான திருவிழா நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான விமான திருவிழா, பெங்களூர் எலகங்காவில் உள்ள இந்திய விமானப்படை விமான நிலையத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 13-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா உள்ளிட்ட 160 நாடுகள் பங்கேற்கின்றன. விமான தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் விமான திருவிழாவையொட்டி நடைபெறும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

மேலும் அதிநவீன போர் விமானங்கள், மிகப்பெரிய பயணிகள் விமானம், அசுரவேகத்தில் பறந்து சென்று இலக்கை தாக்கும் போர் விமானங்கள் என்று 27 வகையான விமானங்கள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கின்றன.

அத்துடன் விமானங்களின் வியாபாரமும் நடைபெற உள்ளது. விமான கண்காட்சியையொட்டி விமானங்களின் சாகச நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காதைப் பிளக்கும் சத்தத்துடன் காற்றைக் கிழித்தபடி மின்னல் வேகத்தில் பறந்து சென்று வானத்தில் பல்டி அடித்து சாகசங்கள் நிகழ்த்தும் விமானங்களை பார்க்க பார்வையாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இதையொட்டி தினமும் 2 முறை அதாவது காலை 10 மணி முதல் மதியம் வரையிலும், பிற்பகலில் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் விமான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அப்போது விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்.

விமான திருவிழா முதல் நாளான இன்று காலையில் விமான சாகசங்கள் கிடையாது. பிற்பகலில் மட்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறும். விமான திருவிழாவையொட்டி விமானங்களின் வியாபாரமும் நடைபெறுகிறது. கடந்த முறை இந்த திருவிழாவின்போது சுமார் ரூ.1.10 லட்சம் கோடிக்கு விமானங்களின் வியாபாரம் நடைபெற்றது.

இந்த முறை அதை விட கூடுதலாக வியாபாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானங்கள் இயங்குவது மற்றும் அவற்றின் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கவும் விமான கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக அமெரிக்க போர் விமானத்தில் (எப்-16) பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூர் பறக்கிறார்.

அதிவேகமாக செல்லக் கூடிய அந்த விமானத்தில் பறந்து செல்வதற்கு அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது. அசுர வேகத்தில் பறந்து செல்லும் அமெரிக்க விமானத்தில் நடிகர் ஷாகித் கபூர் பறந்து செல்லும் காட்சியை வருகிற 12-ந் தேதி(சனிக்கிழமை) பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். இந்த விமானத்தில் பறக்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *