மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் தேவை-மமதாவுக்கு காங். கண்டிஷன்

posted in: அரசியல் | 0

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் தர வேண்டும் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியுள்ளதால், மமதா பானர்ஜி கடுப்பாகியுள்ளார்.

தமிழகத்தில் திமுகவைப் போட்டு நெருக்கி வருவதைப் போல இப்போது மேற்கு வங்காளத்தில் மமதான பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸை, காங்கிரஸ் கட்சி நெருக்க ஆரம்பித்துள்ளது.

சொந்த பலத்தில் எந்த மாநிலத்திலும் வெல்ல முடியாத நிலையில் இருந்தாலும், வீம்பு, வீராப்பு சற்றும் குறையாமல் உள்ள கட்சி காங்கிரஸ். தமிழகத்தில் திமுகவிடம் தேவையில்லாமல் ஏகப்பட் தொகுதிகளைக் கேட்டு, ஆட்சியில் பங்கும் கேட்டு கடுப்பாக்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தற்போது மமதாவிடமும் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளது.

மேற்கு வங்காளத்திலும், தமிழகத்தைப் போலவே சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு தொகுதியை, அதாவது 98 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கியாக வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார். இதில் மறு பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆட்சியில் பங்கு என்ற வார்த்தையை அவர் உபயோகிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியின் இந்த கோரிக்கையால், மமதா பானர்ஜி கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் இதுகுறித்து காங்கிரஸ் தரப்புடன் பேசி தீர்வு காண முடியும் என அவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

கடந்த முப்பது வருடங்களாக இடதுசாரிகளின் பிடியில் உள்ளது மேற்கு வங்காளம். அந்த கோட்டையை மமதான பானர்ஜி கடுமையாகப் போராடி உடைத்து வருகிறார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ள அவர் சட்டசபைத் தேர்தலில் எப்படியும் வெனறு, இடதுசாரி ஆதிக்கத்தை முற்றிலும் தகர்க்க தீவிரமாக உள்ளார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *