ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்த திருப்பம்: பரிந்துரை செய்வதே “டிராய்’ பணி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “லைசென்ஸ் பெற்றும், சேவை வழங்க தவறிய நிறுவனங்களின் லைசென்ஸ்களை ரத்து செய்யலாம் என’ அவ்வப்போது, தொலைத் தொடர்புத் துறைக்கு (டி.ஓ.டி.,) பரிந்துரை செய்ததாக, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான “டிராய்’, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

அதுபோல், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் அரசின் கையில் தான் உள்ளது என்றும் “டிராய்’ திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற சில நிறுவனங்கள், லைசென்ஸ் பெற்ற பின், குறிப்பிட்ட காலவரையரைக்குள் சேவை வழங்க தவறிவிட்டதால், அந்த நிறுவனங்கள் மீது “டிராய்’ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த விவகாரத்தில், ஒரு வருடமாக “டிராய்’ அமைதி காப்பது ஏனோ? என, சுப்ரீம் கோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதில் அளித்து டிராய் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டதாவது:லைசென்ஸ் பெற்ற மொபைல் போன் நிறுவனங்கள் குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் சேவை வழங்காத பட்சத்தில் அந்நிறுவனங்களின் லைசென்ஸ்களை ரத்து செய்யலாம் என, இந்திய தொலைத் தொடர்புத் துறைக்கு, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த நவம்பரில் பரிந்துரை செய்தது. மேலும், லைசென்ஸ் வழங்கப்பட்ட 139 நிறுவனங்களில் 69 நிறுவனங்கள் சேவை வழங்க தவறியதாவும் குறிப்பிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க கோரியிருந்தது.அதுபோல், ஐடியா மற்றும் ஸ்பைஸ் ஆகிய நிறுவனங்கள், விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைந்து சேவை வழங்க திட்டமிட்டது குறித்தும் தொலைத் தொடர்புத் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் காரணமாக, பஞ்சாப், கர்நாடகா மாநிலங்களில் ஐடியா நிறுவனத்தின் சேவைகளையும், மகாராஷ்டிரா, அரியானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில், ஸ்பைஸ் நிறுவனத்தின் சேவைகளையும் ரத்து செய்யலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், விதிகளுக்கு எதிராக செயல்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், எடுக்காததும் அரசின் கையில் தான் உள்ளது. ஏனெனில் எங்கள் பணி சிபாரிசு செய்வதுடன் முடிந்து விடுகிறது.இவ்வாறு “டிராய்’ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடிஸ்லாட், யுனிநார், லூப் டெலிகாம், வீடியோகான், எஸ்-டெல், அலையன்ஸ் இன்பரா, ஐடியா செல்லுலர், டாடா டெலிசர்வீசஸ், சிஸ்டமா ஷியாம் டெலிசர்வீசஸ், டிஷ் நெட் ஒயர்லெஸ், மற்றும் வோடபோன்- எஸ்ஸார் ஆகியவை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் நோட்டீசைப் பெற்ற நிறுவனங்கள் ஆகும்.முன்பு ஸ்வான் டெலிகாம் என்றும், தற்போது எடிஸ்லாட் என்று அழைக்கப்படும் நிறுவனம் நோட்டீசுக்கு பதில் அனுப்பி தங்களால் இழப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளது. அதிலும் ஸ்வான் கம்பெனி புரோமோட்டர் பல்வா ஏற்கனவே சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர். அவரையும், தொழிலதிபர் அம்பானியையும் ஒருசேர விசாரித்தது சி.பி.ஐ., இந்த விஷயத்தில் தங்களுக்கு சம்பந்தமில்லை என்று எஸ்-டெல் நிறுவனம் பதிலளித்திருக்கிறது.

இந்த விஷயத்தில், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தலைமைத் தேர்தல் முன்னாள் ஆணையர்கள் லிங்டோ, டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் என் கோபால்சாமி, ஊழல் கண்காணிப்பு முன்னாள் ஆணையர் பி.சங்கர் போன்றவர்கள் மனுதாரர்கள் என்பதால், இந்த வழக்கு மேலும் சூடுபிடிக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *