சென்னை, மார்ச் 4: அமாவாசை நாள் என்பதால் விருப்ப மனு கொடுக்க ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் திரண்டதால் அண்ணா சாலையில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து பிப்ரவரி 25-ம் தேதியிலிருந்து விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.
மனு அளிக்க சனிக்கிழமை (மார்ச் 5) வரை அவகாசம் இருந்தாலும் அமாவாசை நாள் என்பதால் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளிக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வந்ததால் அவர்களது ஆதரவாளர்கள் ஏராளமான வாகனங்களில் வந்து குவிந்தனர்.
இதனால் தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திருவிழா போல கூட்டம் அலைமோதியது. அண்ணா சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் வரை நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன் (திருப்பத்தூர்), கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), தங்கம் தென்னரசு (திருச்சுழி) உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தனர்.
இதுவரை 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்ற சந்தேகம் இருப்பதால் அனைத்து தொகுதிகளுக்கும் தி.மு.க.வினர் விருப்ப மனு கொடுத்து வருகின்றனர். இதனால் அண்ணா அறிவாலயத்தில் மாலை நேரத்திலும் கூட்டம் அலைமோதியது.
Leave a Reply