புதுடில்லி: அணுமின் உலைகள் வெடிப்பால், ஜப்பான் எதிர்கொண்டு வரும் சவால்களை
அடுத்து, இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்கள், நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களை தாங்கும் பாதுகாப்புடன் உள்ளதா என ஆராய, அணுசக்தித் துறையை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், புக்குஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள இரு உலைகள் வெடித்தன. மூன்றாவது உலை, அபாயத்தில் உள்ளது. இது குறித்து, பார்லிமென்டின் இரு அவைகளிலும் நேற்று பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: ஜப்பானில், 25 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர், நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத பகுதிகளில் உள்ளனர். தற்காலிக முகாம்களில், 70 இந்தியர்கள் இருக்கின்றனர். ஜப்பானுக்கு உதவி செய்ய இந்தியா தயங்காது. நிலநடுக்கம் மற்றும் சுனாமியைத் தாங்கும் விதத்தில், இந்திய அணுமின் உலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என, இந்திய அணுசக்தித் துறை மற்றும் இந்திய அணுமின் கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு அமைப்புகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் தெரிவித்தார். இதற்கிடையில், இந்திய அணுமின் உலைகள் பாதுகாப்பாக இருப்பதாக, இந்திய அணுமின் சக்தி கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இதே கருத்தை, இந்திய அணுமின் கமிஷன் முன்னாள் தலைவர் அனில் ககோட்கர் ஆமோதித்துள்ளார்.
Leave a Reply