ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகள் 9 பேரை நிரந்தரமாக்க ஒப்புதல்: விரைவில் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களில் 9 பேரை பணி நிரந்தரம் செய்ய, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அடங்கிய நீதிபதிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்த பின், நியமன உத்தரவுகள் வெளியாகும். இந்த மாதத்துக்குள் நியமன உத்தரவுகள் வந்துவிடும்.

சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதல் நீதிபதிகளாக, 2009ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி 14 பேர் நியமிக்கப்பட்டனர். ராமநாதன், ராஜ இளங்கோ, ராஜேந்திரன், அரிபரந்தாமன், சி.டி.செல்வம், கர்ணன், கிருபாகரன், சுந்தரேஷ், சிவஞானம், துரைசாமி, ராஜா, மாலா, அருணா ஜெகதீசன், அக்பர்அலி ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் நீதிபதி ராஜ இளங்கோ, ஆந்திர ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்கள், முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு என நியமிக்கப்படுவர். பின், காலியிடங்களுக்கு ஏற்ப இவர்கள் நிரந்தரப்படுத்தப்படுவர். நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படாதவர்கள், கூடுதல் நீதிபதிகளாக பணி நீட்டிக்கப்படுவதும் உண்டு. மறைந்த நீதிபதி ஒருவர், கூடுதல் நீதிபதியாகவே மூன்று முறை பணி நீட்டிக்கப்பட்டு, பின் நிரந்தரப்படுத்தப்பட்டார். ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, இந்த மாத இறுதிக்குள் இரண்டு ஆண்டு காலம் முடிகிறது. இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் அல்லது கூடுதல் நீதிபதிகளாக பணி நீட்டிக்கப்பட வேண்டும். சென்னை ஐகோர்ட்டுக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 60. 45 நிரந்தர நீதிபதிகளும், 15 கூடுதல் நீதிபதிகளும் இருக்க வேண்டும். தற்போது ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகளாக 33 பேர் உள்ளனர். மூன்று நீதிபதிகள் வேறு ஐகோர்ட்டுகளில் நிரந்தர நீதிபதிகளாக உள்ளனர். எனவே, காலியிடங்களில் மட்டும் நிரந்தரம் செய்யலாம். மற்றவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க முடியும்.

கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களின் பட்டியல் சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பப்பட்டது. இவர்களில் நீதிபதிகள் ராமநாதன், ராஜேந்திரன், அரிபரந்தாமன், சி.டி.செல்வம், கர்ணன், கிருபாகரன், சுந்தரேஷ், சிவஞானம், துரைசாமி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாகவும், நீதிபதிகள் ராஜா, மாலா, அருணா ஜெகதீசன், அக்பர்அலி ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நீட்டித்தும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ராஜ இளங்கோவுக்கும் நிரந்தர நீதிபதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் இரண்டு நீதிபதிகள் அடங்கிய குழு வழங்கியுள்ளது. சென்னை ஐகோர்ட்டை பொறுத்தவரை, ஒன்பது பேர் நிரந்தர நீதிபதிகளாக ஆகின்றனர். காலியிடம் ஏற்படும் போது, தற்போதுள்ள கூடுதல் நீதிபதிகளுக்கு நிரந்தரம் கிடைக்கும். நீதிபதிகள் பட்டியல் தற்போது பிரதமர் அலுவலகத்தில் உள்ளது என்றும் விரைவில், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மாதத்துக்குள் நியமன உத்தரவுகள் வர வேண்டும். அதன் பின், இந்த நீதிபதிகளுக்கு முறைப்படி பதவிப் பிரமாணம் நடக்கும். ஐகோர்ட் தலைமை நீதிபதி, பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். தற்போது சென்னை ஐகோர்ட்டில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 49. கடந்த மாதத்தில் மட்டும் ஐகோர்ட்டில் இரண்டு இடங்கள் காலியானது. நீதிபதி சொக்கலிங்கம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, ஜம்மு – காஷ்மீர் ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் விரைவில் ஜம்மு – காஷ்மீர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். ஐகோர்ட்டில் காலியாக உள்ள, நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏதுவாக, ஏற்கனவே ஏழு பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *