ஒரே மேடையில் ஜெ., விஜயகாந்த், விஜய்… எஸ் ஏ சி ஏற்பாடு!!

posted in: அரசியல் | 0

சென்னை: ஜெயலலிதா, விஜயகாந்த் மற்றும் விஜய் ஆகிய மூவரையும் ஒரே மேடையில் அமர வைக்க மாஸ்டர் பிளான் தீட்டியுள்ளார் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன்.

திரைத்துறையில் இப்போதைக்கு ஜெயலலிதாவின் அதி தீவிர ஆதரவாளர் என்றால் அது இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன்தான் எனும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

அவரது மகனும் நடிகருமான விஜய் வெளிப்படையாக இதுவரை அதிமுக குறித்தோ, தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவான பிரச்சாரம் குறித்தெல்லாம் பேசவில்லை.

ஆனாலும், விஜய் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சீட் வாங்கித் தரும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் எஸ் ஏ சந்திரசேகரன். அநேகமாக அவர்களுக்கு 3 தொகுதிகளை அதிமுக ஒதுக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புதுக்கோட்டை தொகுதியில் எஸ் ஏ சந்திரசேகரனே போட்டியிடுகிறார் அதிமுக ஆதரவுடன்.

இந்த நிலையில், மகன் விஜய்யையும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் ஒரே மேடையில் அமரவைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

தான் இயக்கிவரும் “சட்டப்படி குற்றம்” படம் முடியும் தருவாயில் இருப்பதால் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை சென்னையில் இதுவரை யாரும் செய்யாத அளவு பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

இந்த விழாவில் கலந்துகொண்டு பாடல் சிடியை வெளியிடுமாறு ஜெயலலிதாவுக்கு எஸ்ஏசி வேண்டுகோள் விடுக்க, அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

முதல் சிடியை ஜெயலலிதா வெளியிட, பெற்றுக் கொள்கிறார் தேமுதிக தலைவரும் அதிமுகவின் கூட்டணி தோழருமான விஜயகாந்த்.

இந்த விழாவிற்கு தமிழகம் முழவதிலும் உள்ள விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது புதுச்சேரி, கேரளா உள்பட பிற மாநிலங்களிலும் உள்ள விஜய் ரசிகர்களை அழைத்துள்ளார் எஸ் ஏ சி. கூடவே அதிமுகவினரும் குவியப் போகிறார்களாம்.

நேரு உள்விளையாட்டு அரங்கம் அல்லது தீவுத்திடலில் இந்த விழாவை பெரும் மாநாடு போல நடத்தவிருக்கிறார்களாம்.

திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால், அதிமுக-தேமுதிக-விஜய் மக்கள் இயக்கம் ஆகியவற்றின் முதல் தேர்தல் பிரச்சார மேடையே இதுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *