ஓட்டுப்பதிவு ஏற்பாடுகள்: தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை சென்னை வருகிறார்கள்; அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் சந்திப்பு

posted in: மற்றவை | 0

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடக்க உள்ள ஓட்டுப்பதிவு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் குரோஷி நாளை சென்னை வருகிறார்.

அவருடன் தேர்தல் கமிஷனர்கள் வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரம்மா ஆகியோரும் சென்னை வருகிறார்கள்.

சென்னையில் நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு முதலில் அரசியல் கட்சித் தலைவர்களை தேர்தல் கமிஷனர்கள் சந்தித்துப் பேசுகிறார்கள். தேர்தல் பிரசாரம், மற்றும் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டுவது தொடர்பாக உள்ள பல்வேறு கட்டுப் பாடுகளை அரசியல் கட்சியினரிடம் தேர்தல் கமிஷனர்கள் விளக்குவார்கள்.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் அவர்கள் கருத்துக்களும் கேட்பார்கள். பிற்பகலில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

மாலை 5 மணிக்கு தலைமை செயலாளர் மாலதி, டி.ஜி.பி. லத்திகாசரண் ஆகியோருடன் தலைமை தேர்தல் அதிகாரிகள், தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பார்கள். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, பதற்றமான தொகுதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். நாளை மறுநாள் (செவ்வாய்) தேர்தல் அதிகாரிகள் புதுச்சேரி சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *