டோக்கியோ: ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியால் சிதறுண்ட பகுதியில் இன்றுகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டடங்கள் அதிர்ந்தன. மக்கள் பீதியடைந்துள்ளனர். இருப்பினும் சுனாமி வரும் வாய்ப்பில்லை என்று பசிபிக் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜப்பானின் வட கிழக்கில் உள்ள ஹோன்ஷு என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி இன்றுகாலை ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.3 ரிக்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் கட்டடங்கள் அதிர்ந்தன. இதையடுத்து மக்கள் வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியே ஓடினர். மீண்டும் சுனாமி அலை தாக்குதல் நடக்குமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டது.
இருப்பினும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இருந்தபோதிலும் சுனாமி தாக்குதல் வர வாய்ப்பு இல்லை என்று பசிபிக் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பும், ஜப்பான் பூகம்பவியல் அமைப்பும் தெரிவித்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜப்பானை உலுக்கிய 8.9 ரிக்டர் அளவிலான பூகம்பமும், அதைத் தொடர்ந்து உருவான சுனாமி பேரலைகளும் ஜப்பானைப் புரட்டி போட்டு விட்டன. அதிலிருந்து இன்னும் மீளாத நிலையில் தொடர்ந்து சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் அடுத்தடுத்து ஜப்பானில் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்களின் பீதி அதிகரித்துள்ளது.
Leave a Reply