சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ள 63 சீட்களில் 9 சீட்களை இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளனராம்.
அதில் ஈரோடு தொகுதியில் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவருமான யுவராஜா போட்டியிடவுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக போராடி 63 சீட்களைப் பெற்றுள்ளது. தற்போது இதை உள் ஒதுக்கீடு செய்யும் வேலை நடந்து வருகிறது. அதாவது, ஒவ்வொரு கோஷ்டிக்கும் பங்கு பிரித்துக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ராகுல் காந்தியின் செல்லப் பிள்ளையான இளைஞர் காங்கிரஸ் பிரிவுக்கு 9 தொகுதிகளை ஒதுக்கியுள்ளனராம்.
இதன் மூலம் 30 வயது கொண்ட வேட்பாளர்களுக்கு, அதாவது கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கும் கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இளைஞர் காங்கிரஸார் பெருமையுடன் கூறுகின்றனர்.
இளைஞர் காங்கிரஸ் தலைவரான யுவராஜா ஈரோடு தொகுதியில் போட்டியிடவுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான விஜய் இளஞ்செழியன் ஆம்பூரில் நிற்பார் என்று தெரிகிறது. இவர் கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த முன்னாள் எம்.பி. ஜெயமோகனின் மகன் ஆவார். ஆக, இளைஞர் காங்கிரஸிலும் வாரிசு அரசியல் புகுந்து விட்டது.
இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவரும், கார்த்தி சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்தவருமான வரதராஜன் மதுரையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடுவாராம். அனேகமாக மதுரை கிழக்குத் தொகுதியில் அல்லது மேற்குத் தொகுதியில் இவர் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அர்த்தனாரிக்கு சேலம், பேராவூரணியில் மகேந்திரன் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.
கரூர் தொகுதியில் ஜோதிமணி போட்டியிடலாம். இளைஞர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய இரு பெண் வேட்பாளர்களில் இவரும் ஒருவர். ராகுல் காந்தியின் தீவிர ஆதரவைப் பெற்றவர் இவர் என்றும் கூறப்படுகிறது. இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வளரும் பிரகாசமான தலைவர் என்ற பெயரும் இவருக்கு உள்ளது.
இன்னொரு பெண் வேட்பாளராக காயத்ரி இருப்பார். இவர் கோவையில் போட்டியிடக் கூடும். ஆற்காடு தொகுதியில் ராஜேஷ் என்பவர் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு 9 சீட் ஒதுக்கியதைப் போல, சேவாதளம், மகளிர் காங்கிரஸுக்கு தலா 2 சீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply