தமிழக சட்டசபை தேர்தலில், “ஓட்டுக்கு நோட்டு’ என்ற கலாசாரம் வெகு காலம் முன்பே தலை தூக்கிவிட்டது.
வசதியான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களை குறி வைத்து அவர்களுக்கு மட்டும் அப்போது பணம் வழங்கப்பட்டது.
திருமங்கலம் இடைத்தேர்தலுக்குப் பிறகு, ஒவ்வொரு வாக்காளருக்கும் பணம் என்ற புதிய விதியை அனைத்துக் கட்சிகளும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டன. அதுவும், இந்த சட்டசபை தேர்தலில் பண மழை பொழிந்து, வெற்றியைக் கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையோடு, ஒரு தரப்பு களத்தில் இறங்கியுள்ளது.தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, மனு தாக்கல் துவங்கினால், பண பட்டுவாடா போன்றவற்றில் சிக்கும் போது, வேட்பாளரின் கணக்கில் அவை சேர்க்கப்படும். இதனால், தொகுதியும், வேட்பாளரும் முடிவாகும் முன்பே, பணத்தைக் கொண்டு சென்று, பதுக்கி வைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவை, சமீபத்தில் நடந்த சோதனைகளின் போது தெரியவந்துள்ளது.”யாராக இருந்தாலும், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கப் பணம் கொண்டு சென்றால், அதற்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்படும்’ என, தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்.
இதையும் மீறி, பல இடங்களில் வாகனங்கள் மூலம் ரொக்கப் பணம் கடத்தப்படுகிறது. சமீபத்தில், தர்மபுரி மாவட்டத்தில் நடந்த வாகனச் சோதனையின் போது, ஓர் இடத்தில், 14 லட்சம் ரூபாயும், ஒரு வாகனத்தில், 11 லட்சம் ரூபாயும், இன்னொரு இடத்தில், 2.5 லட்சம் ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய ஆவணங்கள் இல்லாததால், அவை பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரியில், டாடா சுமோ காரில் எடுத்து வரப்பட்ட, 2.36 லட்சம் ரூபாய் பிடிபட்டது. திருச்செங்கோடு பகுதியில் துணை ராணுவப் படையினர் நடத்திய சோதனையில், 4 கிலோ தங்கக் கட்டிகள் பிடிபட்டன. வந்தவாசியில், 164 பெட்டியில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட, 874 பட்டுச் சேலைகள் பறிமுதலாகியுள்ளன. இவற்றின் மதிப்பு ஒரு கோடியே, 30 லட்சம் ரூபாய்.அதே போல, தர்மபுரியில், “இன்னோவா’ காரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக்குமார் கொண்டு சென்ற, 41 சேலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆட்டோ டிரைவர்களுக்கு வழங்க இருந்த சீருடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் பரிசுப் பொருட்கள் கொடுத்தற்காக, அமைச்சர் நெப்போலியன், எம்.எல்.ஏ., வசந்தகுமார் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் வாகனம் ஒன்றில், 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பறிமுதல் சம்பவங்கள் அனைத்தும், வாகனச் சோதனையின் போது சிக்கியவை. இதன்படி, சட்டசபை தேர்தலுக்கான பணப் பட்டு வாடா வெகுவேகமாக நடந்து வருவது தெளிவாகிறது.அதோடு, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை போன்ற மாவட்டங்களில் தான், பண வினியோகம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளதும் தெரிய வருகிறது. மற்ற மாவட்டங்களில் இருந்து இது போன்ற சோதனைகள் நடந்ததாக தகவல் இல்லை.தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்ற நோக்கோடு கமிஷன் தீவிரமாக களமிறங்கியிருப்பதால் தான், இந்த சோதனைகளும் நடந்துள்ளன. இதே பாணியில், மற்ற மாவட்டங்களிலும் காண்காணிப்பை தீவிரப்படுத்த, அதிகாரிகளுக்கு கமிஷன் உத்தரவிட வேண்டும்.
பாரபட்சமற்ற சோதனை வருமா?தேர்தலின் போது முறைகேடாக பண நடமாடுவதைத் தவிர்க்க, மாநில அதிகாரிகள், உள்ளூர் போலீசார், துணை ராணுவப் படையினர் என, தேர்தல் கமிஷன், பல்வேறு குழுக்களை அமைத்து கண்காணித்து வருகிறது. மாவட்டச் செயலர்கள், அமைச்சர்களில் துவங்கி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அரசியல் வி.ஐ.பி.,க்கள் வரை பாரபட்சமில்லாமல் அனைத்து வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும். அப்போது தான், சின்ன மீன்களை மட்டும் பிடிபட வைத்துவிட்டு, திமிங்கலங்கள் தப்பிப்பதைத் தடுக்க முடியும்.
Leave a Reply