சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்கள் கூடி அவசர ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவர்கள் சந்திக்க விரைந்துள்ளனர்.
ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பால், அவரது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுமே கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்றுகாலை முதல் தனது கட்சியினரோடு அவசர ஆலோசனையில் இறங்கியுள்ளார். அதேபோல பார்வர்ட் பிளாக் தலைவர் பா.கதிரவன், மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சிபிஐ தலைவர் தா.பாண்டியன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி தலைவர் டாக்டர் சேதுராமன் ஆகியோர் விரைந்தனர்.
அங்கு வைத்து நான்கு தலைவர்களும் தீவிர ஆலோசனை நடத்தினர். அதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம், அனைத்துத் தலைவர்களும் தற்போது தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு விரைந்துள்ளனர்.
3வது அணி அமைப்பது குறித்து இந்தத் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக இதன் மூலம் யூகிக்கப்படுகிறது. இதுகுறித்து விஜயகாந்த்தை சந்தித்து தெரிவித்து தனி அணிக்கு தேமுதிக தலைமை தாங்குமாறு இந்தத் தலைவர்கள் அழைப்பு விடுக்கவுள்ளதாக கருதப்படுகிறது.
இக்கூட்டணியில் மதிமுக, நடிகர் கார்த்திக் கட்சி ஆகியவையும் இணையக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதேசமயம், சரத்குமார் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் நிலை என்ன என்பது தெரியவில்லை
Leave a Reply