பிரெஞ்ச் தளபதி என்றதுமே நம் கண் முன் தோன்றுபவர் நெப்போலியன்தான். நெப்போலியன் போனபார்ட் சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும், நிர்வாகியாகவும், தலைமைப் பண்பு மிக்கவராகவும் திகழ்ந்தார்.
வரலாறுகள் சொல்லும் பல தகவல்கள் வெறும் வரலாறுகளாகவே இருக்கும். ஆனால், நெப்போலியனைப் பற்றிய வரலாறு, நம் கல்விக்கு வழிகாட்டியாகவும் உள்ளது.
வாழ்வின் இத்தனை உயரத்திற்குச் சென்ற நெப்போலியனின் பல நல்ல குணநலன்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
அவற்றை மாணவர்களும் வளர்த்துக் கொண்டால், பல உயரிய பதவிகளை அடையலாம்.
தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பது
புத்தகங்களை தொடர்ந்து படிப்பது ஒன்றே அன்றைய காலத்தில் அறிவை வளர்த்துக் கொள்வதற்கான வழியாகும். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை காதலிக்கத் துவங்கிவிட்டார் நெப்போலியன். இவரது அறிவுத் தேடல் எப்போதுமே அடங்கவில்லை. பிரெஞ்ச் சக்ரவர்த்தியாக கன நேரமும் ஓய்வின்றி கடுமையாக உழைத்த நாட்களிலும் சரி, செயின்ட் ஹெலெனாவில் இருந்த சிறைச்சாலையில் தன் இறுதி நாட்களை கழித்த போதும் சரி. அவர் எப்போதும் புத்தகங்களை விட்டு விலகியதில்லை.
நெப்போலியன், தான் பேரரசராக இருக்கும் போதும் புத்தகங்கள் படிப்பதை மறக்கவில்லை. அவரது அரண்மனையில் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை பராமரித்து வந்தார்.
1808ஆம் ஆண்டுகளில் மிக இக்கட்டான போர் தருணத்தில் படைகளை நடத்திச் சென்றிருந்த நெப்போலியன் தன் நூலக பொறுப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், நடமாடும் நூலகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். 1000 புத்தகங்களை மார்ஜின்கள் எதுவும் இன்றி மிகவும் சிறிய எழுத்துருக்களால் பிரின்ட் செய்து அனுப்பவும் என்று இருந்தது. அதன்படி, அவர் எங்கு படைகளுடன் சென்றாலும், அங்கு இந்த நூலகமும் இருக்கும்.
வாழ்ந்து மிக உயரிய இடத்தை அடைந்து, இறுதி காலத்தை அடையும் வரை தனது அறிவுப் பசியை வளர்த்துக் கொண்டு இருந்த நெப்போலியனை போன்று நாமும் புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
தேர்ந்தெடுத்து படித்தல்
புத்தகம் படிப்பது என்றால் எதையாவது ஒன்றை படித்துக் கொண்டே இருப்பது அல்ல. தேர்ந்தெடுத்து படிப்பது தான் முக்கியம். தேவையில்லாத புத்தகங்களை எல்லாம் படித்து நேரத்தை வீணடிப்பதை விட, நமது நேரத்தை பொன்னானதாக மாற்றும் புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்கும் அறிவு நமக்கு வளர வேண்டும். அறிவையும், திறனையும் வளர்க்கும் வகையிலான புத்தகங்களையே நெப்போலியன் வாசித்தார். அதேப்போல, உங்கள் ஆர்வத்திற்கும், திறமைக்கும் ஏற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.
நேர மேலாண்மை
மாறி வரும் நாகரீக உலகில், பாடப்பிரிவுகளில் நேர மேலாண்மை என்பது ஒரு கடினமானப் பாடமாக உள்ளது. ஆனால், நெப்போலியன் தன் வாழ் நாள் முழுவதும் நேர மேலாண்மையின் தளபதியாக இருந்தார். அவர் ஒரு சிறந்த வழிகாட்டியாக வாழ்ந்துள்ளார்.
51ஆம் வயதில் அவர் மரணமடைந்தார். 45 வயதில், வாட்டர் லூ போரில் தோல்வி அடைந்து போர் கைதியாக செயின்ட் ஹெலினா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 51 வயது வரை வாழ்ந்து வரலாற்றில் அழிக்கமுடியாத வடுவை ஏற்படுத்தி மறைந்து விட்டார். இதற்கு முக்கியக் காரணம் நேர மேலாண்மையே.
இந்த நிமிடத்தில் வாழுங்கள்
நெப்போலியனின் மிக முக்கியமான வாழ்க்கை தத்துவம் என்றால் அது இந்த நிமிடம்தான். எப்பொழுது ஏதாவது ஒரு பிரச்சினை கண் முன் வருகிறதோ, அப்பொழுது மற்ற எல்லாவற்றையும் அவர் மறந்து விடுவார், அந்த பிரச்சினை பற்றிய எல்லா மூலை முடுக்கு விஷயங்களையும் ஆராய்ந்து அதற்கான வழியைத் தேடுவார். அதனால்தான் அவரது பல முடிவுகள் அபாரமான வெற்றியை அளித்தன.
சிக்கனம்
நெப்போலியன் தன் சொந்த வாழ்வில் சிக்கனவாதியாக வாழ்ந்துள்ளார். எப்போதும் தேவைக்கேற்ப வாழுங்கள், வீட்டில் சிக்கனமாக இருங்கள், பொது இடத்தில் சிறப்பாக இருங்கள் என்பதுதான் நெப்போலியனின் அறிவுரையாகும்.
இருவேளை உணவு மட்டுமே உண்பார் நெப்போலியன். இவரது வருமானத்தில் சேமிப்புதான் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்
பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இல்லாமல், நாம் வாழ்ந்ததற்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். வெறும் வார்த்தையாலோ, பேச்சாலோ அல்லாமல் வாழ்ந்து காட்டி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் நெப்போலியன். இவர் வடிவமைத்த சட்டம் தற்போதும் பல நாடுகளாலும், சட்டக் கல்லூரி, சட்டப் பள்ளிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நெப்போலியன் தனது படைகளால்தான் புகழ்பெற்றார். ஆனால், அந்த படைகளை நடத்திச் செல்ல அவரது ஒருங்கிணைப்பு, நிர்வாகத்திறன், தலைமைப் பண்பு போன்றவைதான் உதவின. இந்த திறன்களை மாணவர்களாகிய நாமும் கையாண்டு நமது லட்சியத்தின் பாதையில் செல்வோம்.
Leave a Reply