சென்னை: “போலீஸ் ஜீப், போலீஸ் மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக, வந்த புகார்கள் குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் அவை அதிர்ச்சி தரும் தகவல்கள் ‘என, சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியைச் சேர்ந்த, தில்லை நடராஜன் மற்றும் அமைச்சர் கே.பி.சாமி தாக்கல் செய்த மனுக்களில் தேர்தல் அதிகாரிகள் கெடுபிடி சோதனை இருப்பதாக அவற்றிற்கு தடை விதிக்க வேண்டும்’ என கூறினர். இம்மனுக்களை நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்து, இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் கமிஷன் சார்பில், சீனியர் வக்கீல் ஜி.ராஜகோபால், அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அமைச்சர் கே.பி.பி.சாமி சார்பில், சீனியர் வக்கீல் விடுதலை, தில்லை நடராஜன் சார்பில் சீனியர் வக்கீல் தியாகராஜன், உந்துனர் அறக்கட்டளை சார்பில், சீனியர் வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு ஆஜராகினர்.
கோர்ட்டில் நடந்த வாதம்:
சீனியர் வக்கீல் ஜி.ராஜகோபால் (தேர்தல் கமிஷன்): தேர்தல் விதிமுறைகளை கண்டிப்புடன் தேர்தல் கமிஷன் பின்பற்றுகிறது. இதை நாங்கள் நிரூபித்துள்ளோம். பொது மக்களை துன்புறுத்துவதாக ஒரு தரப்பும், கடமையை செய்யவில்லை என, மற்றொரு தரப்பும் குற்றம் சாட்டுகின்றன. மத்திய அரசு துறையில் இருந்து நாங்கள் பெற்ற தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன (சில ஆவணங்கள் அடங்கிய கோப்பு, நீதிபதிகளிடம் சமர்பிக்கப்பட்டது) போலீஸ் ஜீப் மூலம் பணம் கொண்டு செல்லப்படுவதாக, எங்களுக்கு தகவல்கள் வந்தன. பணம் எப்படி வந்தது? எங்கே பெறப்பட்டது? எங்கே வைக்கப்பட்டிருந்தது? என்கிற விவரங்கள் திரட்டப்பட்டது. இதுவரை 2,900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பணம் பட்டுவாடா செய்த போலீஸ் அதிகாரி மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். அனாமதேய தகவலின் அடிப்படையில் நாங்கள் செயல்படவில்லை. சில பெயர்களை பார்க்கும் போது உண்மையில் அதிர்ச்சியாக உள்ளது. தேர்தல் கமிஷன் சர்வாதிகாரமாக செயல்படுகிறது எனக் கூறுவது தவறு. எங்களுக்குரிய அதிகாரங்களை முதன் முறையாக கண்டிப்புடன் அமல்படுத்துகிறோம். சட்டப்படி நாங்கள் செயல்படுகிறோம். நூற்றுக்கணக்கான தகவல்கள் எங்களுக்கு வருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஒரு இன்ஸ்பெக்டர் பணம் கொடுத்துள்ளார். தேர்தல் அதிகாரிகள் ஒரு இடத்துக்கு செல்லும் முன், சோதனையைத் தவிர்க்க முன்கூட்டி தகவல் கொடுத்து விடுகின்றனர். தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு எதிராக ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டுவது சரியல்ல.
அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன்: நீதித்துறைக்கு இருக்கும் அதிகாரத்தை தேர்தல் கமிஷன் எடுத்துக் கொள்ள முடியாது. தேர்தல் கமிஷனின் உத்தரவை மறு ஆய்வு செய்ய, கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது.
சீனியர் வக்கீல் விடுதலை: தேவையின்றி சோதனை நடத்துவதன் மூலம், வேட்பாளரின் புகழுக்கு கெடுதல் ஏற்படுகிறது. சோதனை செய்வதற்கான உத்தரவு எதையும் அதிகாரிகள் பெறவில்லை. சர்வாதிகார அமைப்பாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. மனதை செலுத்தாமல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். நடத்தை விதிகள் அரசியல் கட்சிக்கும், வேட்பாளருக்கும் பொருந்தும் என்றால், அதே விதிகள் தேர்தல் கமிஷனுக்கு பொருந்தாதா? .
சீனியர் வக்கீல் தியாகராஜன்: குற்றவியல் நடைமுறைச் சட்டம், வருமான வரிச் சட்டப்படி அதிகாரம் உள்ளது என தேர்தல் கமிஷன் கூறுகிறது. அப்படியென்றால், அந்தச் சட்டங்களில் கூறியுள்ளபடி தேர்தல் கமிஷன் நடக்க வேண்டும். அரசியல் கட்சிகள், வேட்பாளர்களிடம் சோதனை நடத்தலாம். பொது மக்களிடம் சோதனை நடத்த முடியாது.
சீனியர் வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு: தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு நியாயமானதாக தெரியவில்லை. சுத்தமான மனதுடன் மனு தாக்கல் செய்யப்படவில்லை.
தமிழக அரசின் தலைமைச் செயலர் மாலதி தாக்கல் செய்த பதில் மனு: தமிழக டி.ஜி.பி., (சட்டம் ஒழுங்கு) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் இடையே பிரச்னை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், அவர் விடுமுறையில் சென்றுள்ளார். இது போலீஸ் படையினரின் மன உறுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். மாநில அரசுடன் கலந்து ஆலோசித்துவிட்டு, இத்தகைய உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பித்திருக்க வேண்டும். அரசிடம் கலந்து ஆலோசிக்கும் போது, தேர்தல் கமிஷனுக்கும் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். பொது மக்களை பாதிக்கும் வகையில் சோதனை, பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் “முதல் பெஞ்ச்’ தள்ளி வைத்துள்ளது.
Leave a Reply