தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்: அரவாணிகள் சங்க தலைவி பேட்டி

posted in: அரசியல் | 0

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழ்நாடு அரவாணிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரவாணிகள் சங்கத்தின் செயலாளர் ஏ.வி.கிருபா மற்றும் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் இன்று காலை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். திருநங்கைகளுக்கென தனி நலவாரியம் அமைத்து திருநங்கைகள் தினத்தை அங்கீகாரம் அளித்து அரசாணை பிறப்பித்த தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு, சட்டசபை தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ஆதரவு அளிப்பதோடு தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பாடுபடுவதாக உறுதி அளித்தனர்.

பின்னர் தமிழ்நாடு அரவாணிகள் சங்க தலைவி பிரியாபாபு, செயலாளர் கிருபா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நாங்கள் சந்தித்து வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக கூறி இருக்கிறோம். தமிழ்நாட்டில் 3 லட்சம் அரவாணிகள் இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில்தான் எங்களுக்கு மரியாதை கிடைத்தது. அரவாணிகள் வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு கொடுத்து இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் எங்களை சேர்த்திருக்கிறார்கள். இலவச அறுவை சிகிச்சைக்கும் அரசு உதவுகிறது. பல்வேறு நலத்திட்டங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. எனவே இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்ய முடிவு செய்திருக்கிறோம். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் இருந்து எங்கள் பிரசாரத்தை தொடங்குவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *