மா.செயலாளர்கள் போர்க்கொடி, மேலும் 4 தொகுதிகள் கேட்கும் விஜயகாந்த்-அதிமுகவுடன் பேச்சு தொடர்கிறது

posted in: அரசியல் | 0

சென்னை: தாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தராததால், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அவர்களில் 7 பேர் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதையடுத்து கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனையில் இறங்கியுள்ளார்.

41 தொகுதிகளை அடையாளம் கண்டு விட்டோம் என்று தேமுதிக கூறிய பின்னரும் கூட அதன் தொகுதிகளை கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்னும் அறிவிக்காமல் உள்ளதால் அக்கட்சியினர் பெரும் குழப்பமடைந்துள்ளனர். இன்றாவது தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகுமா என்று கொட்டாவி விட்டபடி அனைவரும் காத்துள்ளனர்.

மகா குழப்பத்தில் தொடர்ந்து நடை போட்டுக் கொண்டிருக்கிறது அதிமுக கூட்டணி. அதிமுகவின் போக்கால் வெறுத்துப் போன மதிமுக கூட்டணியே வேண்டாம் என்று போய் விட்டது. இன்னொரு முக்கியக் கட்சியான தேமுதிகவோ இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் உள்ளது.

இக்கட்சிக் குழுவினர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஜெயலலிதாவுடன், 2 நாட்கள் விடிய விடிய சுமார் 20 மணி நேரம் நீண்ட ஆலோசனை நடத்தினர்.

அதில் 41 தொகுதிகளையும் அடையாளம் கண்டுவிட்டதாகக் கூறிவிட்டுச் சென்றார் பண்ருட்டி. இதனால் நேற்றே விஜயகாந்த் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று அதிகாலை வரை ஒரு சத்தத்தையும் காணோம்.

நேற்று முழுவதும் தேமுதிக தலைமை அலுவலகம் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த அளவுக்கு படு இறுக்கமாக காணப்பட்டது தேமுதிக அலுவலகம்.

தாங்கள் கேட்ட சில முக்கியத் தொகுதிகளை அதிமுக தர மறுத்து விட்டதாக தேமுதிக தரப்பில் கூறப்படுகிறது.

குறி்ப்பாக 7 மாவட்டங்களில் தேமுதிகவுக்கு ஜெயலலிதா ஒரு சீட் கூட தரவில்லை, இதனால் அந்த மாவட்டச் செயலாளர்கள் விஜய்காந்திடம் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். அதிமுகவே வேண்டாம், வழக்கம் போல தனித்துப் போட்டியிடுவோம் என்று அவர்கள் விஜயகாந்த்திடம் உறுதிபட தெரிவித்துள்ளனராம்.

இவர்களின் ‘டோன்’ வழக்கத்திற்கு மாறாக சற்று அழுத்தமாக இருப்பதால் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து இன்று காலை முதல் அவர் மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதுதான் தேமுதிக தொகுதிகளா?:

தேமுதிகவுக்கு கொடுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம் என்று ஒன்று கசிந்துள்ளது. அதன்படி இந்தத் தொகுதிகள் உள்பட 41 தொகுதிகளை அதிமுக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அவை திருவள்ளூர், ஆவடி திருவொற்றியூர், அண்ணா நகர், விருகம்பாக்கம், பல்லாவரம், உத்திரமேரூர், சோளிங்கர், ஆற்காடு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, செங்கம், திருவண்ணாமலை, செய்யாறு, திண்டிவனம், உளுந்தூர்ப்பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சங்ககிரி, சேலம், திருமயம் திருப்பத்தூர், மதுரை மேற்கு, விருத்தாச்சலம், அரியலூர், ஈரோடு வடக்கு அல்லது தெற்கு, ஊட்டி, தொண்டாமுத்தூர், திருச்சி மேற்கு, பேராவூரணி, நெய்வேலி, பண்ருட்டி, திருவாடானை, கோவில்பட்டி, கடையநல்லூர், குளச்சல், விருதுநகர், பெரம்பலூர்.

இந்தப் பட்டியலால் பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும் அதிருப்தியில் இருப்பதால் விஜயகாந்த்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.

மேலும் 4 தொகுதிகள் தர கோரிக்கை:

இந் நிலையில் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறிவிட்டதால் அதிமுக வசம் கூடுதலாக உள்ள தொகுதிகளில் 4 இடங்களை தங்களுக்குத் தர வேண்டும் என்று விஜய்காந்த் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பேச்சு தொடர்வதாக அறிவிப்பு:

இந் நிலையில் நேற்று அதிகாலையே பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும், விஜய்காந்தின் அனுமதி பெற்று 41 தொகுதிகள் அறிவிக்கப்படும் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறிவிட்டுச் சென்ற நிலையில், இன்றும் பேச்சுவார்த்தை தொடர்வதாக தேமுதிக அறிவித்துள்ளது.

இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் இழுபறி ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

அதேசமயம், அதிமுக கூட்டணியை விட்டுவிட்டு தனித்துப் போகும் அளவுக்கு தற்போது விஜயகாந்த்தின் நிலை இல்லை என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. அந்த அளவுக்கு அதிமுகவிடம் அவர் ‘வேறு விஷயங்களில்’ வசமாக ‘சிக்கி’யுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அந்த ‘சிக்கல்’ இல்லாமல் போயிருந்தால் அதிமுக 160 தொகுதிகளை அறிவித்த அடுத்த விநாடியே அவர் தனித்துப் போட்டியிடும் முடிவை அறிவித்திருப்பார் என்றும் கூறுகிறார்கள்.

தேமுதிகவினர் கார்களில் ஆணையம் சோதனை:

இந் நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த தேமுதிகவினரின் கார்களில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு வந்திருப்பவர்கள் ஏராளமான பணம் கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *