மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவது ஏற்கத்தக்கதல்ல: கிருஷ்ணா

posted in: மற்றவை | 0

இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டுமென்று, அந்நாட்டு அரசிடம் பல முறை கூறிவிட்டோம். தவிர, இந்திய மீனவர்கள் மீது அந்நாட்டு கடற்படை துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல.

இந்நிலை மாற வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது,” என்று வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறினார்.

லோக்சபாவில் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா நேற்று பேசியதாவது: இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அங்கு தமிழர் பிரச்னை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வந்ததே, பல பிரச்னைகளுக்கும் காரணம். இப்போது போர் முடிந்துவிட்ட சூழ்நிலையில், அங்கு தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு உரிய மரியாதையும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும். இதற்காக அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேயுடன் பல முறை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி பேசி வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும். அதற்குரிய நிவாரணப் பணிகளையும், நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் உணர்ந்து, அதற்கேற்ப வகையில் அவற்றை நிறைவேற்றிட வேண்டும்.

கச்சத்தீவு மீட்பு பிரச்னையை பொறுத்தமட்டில், அங்கு போய் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கும், யாத்ரிகர்களுக்கும் முழு பாதுகாப்பை அளிக்க வேண்டும். இந்திய மீனவர்களை தொடர்ந்து இலங்கை ராணுவம் தாக்கி வருகிறது. மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பலர் மீது துப்பாக்கிச் சூடும் நடக்கிறது. சமீபத்தில் கூட இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது ஏற்கத்தக்கதல்ல. துப்பாக்கிச் சூடு நடத்துவது தவறான செயல். இதை அந்நாட்டு அரசுக்கு முறைப்படி தெரிவித்து உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு இரு நாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்புமே மீன்பிடி தொழிலை சுமுகமாக நடத்திக் கொள்ள தேவையான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படவுள்ளன.

எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டுள் ளது. இதை நிறுத்தாத வரையில், அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திட இந்தியா தயாராக இல்லை. சுமுக உறவு ஏற்பட வேண்டுமெனில், பல விஷயங்களில் பாகிஸ்தான் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் எல்லாமே, அதே பயங்கரவாதத்திற்கு பலியாகி வருகின்றன. பாகிஸ்தானில் நடைபெறும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் எல்லாமே அதைத்தான் காட்டுகின்றன.அணு ஆயுதங்களை பாகிஸ்தான் வைத்திருப்பதை இந்தியா நன்றாகவே உணர்ந்துள்ளது. அதை திறம்பட எதிர்கொள்ள இந்தியாவிடமும் போதுமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் உள்ளன. எனவே, நாட்டு மக்கள் கவலைப்படத் தேவையில்லை. “அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை’ என்ற இந்தியாவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.

வங்கதேசத்துடன் நல்ல உறவை இந்தியா கொண்டிருக்கிறது. பல விஷயங்களில் இரு தரப்புமே இணக்கத்துடனும் உதவிக் கொள்ளும் மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றன. சமீபத்தில் கூட அந்நாட்டுக்கு 45 கோடி ரூபாய் நிதியை இந்தியா அளித்துள்ளது. அந்நாடு தரும் ஒத்துழைப்பை வைத்து, வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை சம்பவங்களை இந்தியாவால் குறைக்க முடிந்துள்ளது.நேபாளத்துக்கு இந்தியா மீது சற்று விரோதப் போக்கு நிலவுகிறது. இங்குள்ள தலைவர்கள் சிலர் அந்நாட்டுடன் நல்ல புரிந்துணர்வுடன் இருக்கின்றனர். அவர்கள் தலையிட்டு, இந்தியாவின் நட்பை முழு அளவில் பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தர இந்தியா தயாராகவே உள்ளது.ஆப்கானிஸ்தான் விரும்பும் வரை இந்தியாவும் நல்லுறவை வளர்க்க விருப்பமாக உள்ளது. அங்குள்ள பிரச்னைகளிலும் அவர்கள் கேட்டுக் கொண்டால், இந்தியா தலையிட்டு தீர்வு ஏற்படுத்த தயாராகவே உள்ளது.

சீனாவுடன் இந்தியா நல்ல உறவைத்தான் கொண்டுள்ளது. எனினும், காஷ்மீரில் உள்ளவர்களுக்கு சீனா தனி விசா அளித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, அந்நாட்டு அரசுடன் இந்தியா முறைப்படி பேசி வருகிறது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா நல்ல நட்புறவைக் கொண்டுள்ளது.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறுவது போல் இந்தியா தனிமைப்படுத்தப்படவில்லை. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகவே உள்ளது. ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாவதற்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவளித்துள்ளன.இவ்வாறு கிருஷ்ணா பேசினார்.”ஜப்பானில் அணு கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளதால், நிலைமைக்கு ஏற்ப அங்குள்ள இந்தியர்களை கொண்டு வருவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜப்பானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அங்குள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளனர்’ என, பார்லிமென்டுக்கு வெளியே கிருஷ்ணா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *