விதிமுறைகளை மீறி செயல்படும் கல்லூரிகளுக்கு சிக்கல்

posted in: கல்வி | 0

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில்(என்.சி.டி.இ) சட்டத்தின்படி செயல்படாத கல்லூரிகளின் அங்கீகாரத்தை மண்டல கமிட்டிகள்(ஆர்.சி) இனி ரத்துசெய்ய முடியும்.

டெல்லி உயர் நீதிமன்றம் இதற்கான உத்தரவை வழங்கியுள்ளது. ஏனெனில் நாட்டின் பல கல்லூரிகள் என்.சி.டி.இ. விதிகளை பின்பற்றாமல் இயங்கி வருகின்றன. எனவே இனிமேல் மண்டல கமிட்டிகளே கல்லூரிகளை ஆய்வுசெய்து, தேவைப்பட்டால் அவற்றின் அங்கீகாரத்தையும் ரத்துசெய்ய முடியும்.

ஒரு கல்லூரி ஒருதடவை அங்கீகாரம் பெற்றுவிட்டால், அந்த கல்லூரியை ஆய்வு செய்வதற்கு மண்டல கமிட்டிக்கு அதிகாரம் இல்லை என்பதை வலியுறுத்தி சில கல்லூரிகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. ஆனால் அந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மண்டல கமிட்டிகளுக்கு மட்டுமே ஒரு கல்லூரி விதிமுறைகளின்படி செயல்படுகிறதா என்பதை ஆய்வுசெய்வதற்கான அதிகாரம் உண்டு என்று கூறியுள்ளது. மேலும் அந்த கமிட்டியின் ஆய்வு அதிகாரத்தை கேள்விகேட்க முடியாது என்றும் கூறியுள்ளது.

நாட்டிலுள்ள நெடுஞ்சாலைகளின் ஓரங்களில், ஆள் அரவமே இல்லாத இடங்களில் கல்லூரிகள் என்ற பெயரில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் முளைத்துள்ளன. இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் யார் படிப்பார்கள் என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. மேலும் அங்கீகாரம் பெறுவதற்கு முன்பாக மண்டல கமிட்டியால் செய்யப்படும் ஆய்வின்போது காண்பிக்கப்படும் உள்கட்டமைப்பு வசதிகள், பின்வரும் காலங்களில் நீடித்து இருப்பதில்லை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *