சென்னை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஏ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.
சாதிக் பாட்சாவின் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்தவர் சாதிக் பாட்சா. ராசாவும் இவரும் நெருங்கிய நண்பர்கள். சென்னையில் கிரீன் ஹவுஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வந்தார். ராசா அமைச்சரான பின்னர்தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது என்பதால் இவரும் ஸ்பெக்ட்ரம் விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா சிக்கி பதவியிழந்ததைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு நடத்தியது. ரெய்டுக்குள்ளானவர்களில் சாதிக் பாட்சாவும் ஒருவர்.
இன்று உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில் விசாரணை நிலவர அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. மேலும், மார்ச் 31ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் கூறியிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாட்சா இன்று தற்கொலை செய்து கொண்டார். தேனாம்பேட்டையில் பாட்சாவின் வீடு உள்ளது. இன்று பிற்பகல் அவர் அங்கு தூக்குப் போட்டுக் கொண்டார். இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாட்சாவின் மரணம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இந்த தற்கொலை குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏன் தற்கொலை?-சிபிஐ விசாரணை!:
சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி சிபிஐ தலைமையகத்திலிருந்து சென்னையில் உள்ள சிபிஐ அதிகாரிககளுக்கு உத்தரவு வந்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாதிக் பாட்சா ஒரு முக்கிய நபர் என்பதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் சிபிஐ சாதிக் பாட்சா மரணம் குறித்த விசாரணையில் இறங்கியுள்ளது.
மேலும், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருவதால் சிபிஐக்கும் இது பெரும் சிக்கலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply