அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் அடக்கம் : 5 லட்சம் பேர் அஞ்சலி

posted in: மற்றவை | 0

புட்டபர்த்தி : சாய்பாபாவின் உடல், அரசு மரியாதையுடனும், சர்வமத பிரார்த்தனையுடனும் புட்டபர்த்தியின் பிரசாந்தி நிலையத்தில், நேற்று அடக்கம் செய்யப்பட்டது.


பாபாவின் அண்ணன் மகன் ரத்னாகர், இறுதி சடங்குகளை செய்தார்.

கடந்த 24ம் தேதி ஸித்தியடைந்த சாய்பாபாவின் உடல், கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்களும், உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் பலரும், சாய்பாபாவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஐந்து லட்சம் பேர், பாபாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.புட்டபர்த்தியின் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் கூடத்தில், ஏழு அடி ஆழமும், 12 அடி நீளமும் கொண்ட குழி தோண்டப்பட்டு அவரது உடல் படுத்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது. சாய் அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரும், பாபாவின் அண்ணன் மகனுமான ரத்னாகர், இறுதிச் சடங்குகளை செய்தார்.இறுதிச் சடங்கின் போது, அவர், துக்கம் தாளாமல் விம்மி அழுதார். விபூதி, மண், உப்பு, வெள்ளி, தங்கம், நவரத்தினங்கள் சமாதி குழிக்குள் போடப்பட்டன. நாடு முழுவதும் உள்ள நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், பாபாவின் உடல் மேல் தெளிக்கப்பட்டது. பின்னர் அவரது உடலுக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

முன்னதாக, மூவர்ண தேசியக்கொடி அவர் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழை மீது போர்த்தப்பட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின், அவரது உடல், குழிக்குள் இறக்கப்பட்டவுடன் இந்து, முஸ்லிம், கிறித்துவர், ஜைனர், சீக்கியர், புத்தமத சாமியார்கள் என, சர்வமத பெரியவர்கள், அவரவர் மதங்களின் புனித நூல்களை படித்து பிராத்தனை செய்தனர். காலை 9 மணிக்கு ஆரம்பித்த இறுதிச் சடங்குகள், காலை 10.40 மணிக்கு முடிந்தன.இறுதிச் சடங்கில், மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கவர்னர் நரசிம்மன், பா.ஜ., தலைவர்கள் அத்வானி, பண்டாரு தத்தாத்ரேயா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான், கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமாதி மண்ணால் மூடப்பட்ட பிறகு அந்த இடத்தை பார்வையிட பக்தர்கள் நேற்று மதியம் முதல் அனுமதிக்கப்பட்டனர். 29ம் தேதி வரை, இந்த இடத்தை பார்வையிட பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன் பின், இந்த இடத்தில் பாபாவுக்கு தங்க சிலை வைக்கப்பட்டு நினைவாலயம் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.சாய்பாபாவின் இறுதிச் சடங்குகளை, ஆந்திர மாநில “டிவி’க்களும், தேசிய அளவில் உள்ள “டிவி’க்களின் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்தன.மேலும், சாய் அறக்கட்டளை தன் மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என, நீதிபதி பகவதி நேற்று தெரிவித்தார்.தவிரவும், சாய்பாபா உடல் அடக்கம் செய்த நேரத்தில், தெளிவான வானத்தில் சந்திரன் தெரிந்தது என, அவர் பக்தர்கள் பரவசப்பட்டனர். இது அவர் காட்டும் அதிசயம் என மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *