ஆசிரியர் பள்ளிகள் இணைப்பு பெற விதிக்கப்பட்ட இரண்டு நிபந்தனைகள் செல்லாது: ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : “ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மாநில அரசின் இணைப்பு (அபிலியேஷன்) பெறுவதற்காக விதிக்கப்பட்ட இரண்டு நிபந்தனைகள் செல்லாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் துவங்கி செயல்படுவதற்கு, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். பின், அந்தந்த மாநில அரசிடம் இருந்து இணைப்பு (அபிலியேஷன்) பெற வேண்டும். மாநில அரசிடம் இருந்து ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இணைப்பு பெறுவதற்கு, சில நிபந்தனைகளை அரசு விதித்தது. கடந்த 2008 ல் இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
புதிய ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கும், ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கும், இந்த நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. புதிதாக இணைப்பு கோரும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், அரசு நியமித்துள்ள குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகளில் உள்கட்டமைப்பு மற்றும் நிலம், கட்டடம், இதர வசதிகள் குறித்து குழு ஆய்வு செய்து, நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், ஆசிரியர் கல்வி இயக்குனருக்கு அறிக்கை அனுப்பும். அதன்படி, இணைப்பு வழங்கப்படும். ஏற்கனவே இயங்கி வரும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை பொறுத்தவரை, குறிப்பிட்ட படிவத்தில் ஆறு மாதங்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கை, வருகைப் பதிவேடு, பள்ளிகளுக்கு சென்று பார்வையிடுவது தொடர்பாகவும் சில வழிமுறைகளை அரசு வகுத்துள்ளது. அரசு பிறப்பித்த இந்த நிபந்தனைகளை எதிர்த்து ஐகோர்ட்டில், சுயநிதி தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் டி.வி.கே.பாலு மனு தாக்கல் செய்தார். இம்மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனுவில், “பள்ளிகளுக்கான நிலம், கட்டடம், மற்றும் இதர வசதிகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் திருப்தியடைந்த பின்பே, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் அங்கீகாரம் வழங்குகிறது. எனவே, மாநில அரசின் இணைப்பு பெற மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டியதில்லை’ என, கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதிகள் டி.முருகேசன், கே.கே.சசிதரன் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரர் சார்பில் சீனியர் வக்கீல் முத்துகுமாரசாமி, வக்கீல் ஆர்.சுரேஷ்குமார் ஆஜராகினர்.

அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், சிறப்பு அரசு பிளீடர் சங்கரன், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் சார்பில் வக்கீல் கே.ராமகிருஷ்ணரெட்டி ஆஜராகினர். “டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: அங்கீகாரம் கோரும் விண்ணப்பத்தை பரிசீலிக்க, மண்டல அளவில் ஒரு குழுவை ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் அமைத்துள்ளது. இக்குழுவில் மாநில அரசு சார்பில் ஒரு பிரதிநிதி உள்ளார். அங்கீகாரம் கோரும் விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கு முன், நிபுணர் குழுவை நியமித்து பள்ளியில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் பயிற்றுவிக்கும் வசதிகளை ஆய்வு செய்கிறது. நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையை, மண்டலக் குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கிறது. அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மாநில அரசும் அங்கம் வகிக்கிறது. எனவே, நிபுணர்கள் மற்றும் மாநில அரசின் பிரதிநிதி அடங்கிய மண்டல குழு அங்கீகாரம் வழங்கும் போது, மாநில அரசின் இணைப்புக்காக மீண்டும் ஆய்வு செய்வதில் எந்த பொருளும் இல்லை. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகள் இல்லை என்கிற முகாந்திரத்தின்படி, மாநில அரசின் இணைப்பு தர மறுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகளை நிரூபிக்க வேண்டும் என்கிற நிபந்தனைகள் ஏற்கனவே மத்திய சட்டத்தில் உள்ளதால், இந்த நிபந்தனைகளை பொறுத்தவரை மாநில அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏனெனில், இது மாநில அரசின் நிர்வாக அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது. மாணவர்கள் சேர்க்கை, வருகை, பள்ளிகளுக்கு சென்று பார்வையிடுதல் ஆகியவை தொடர்பான நிபந்தனைகள் செல்லும். மற்ற இரண்டு நிபந்தனைகளும் செல்லாது. இவ்வாறு, “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *