ஐயோ பாவம் ஜெயலலிதா’: கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: இலங்கை தமிழர்களுக்காக என்றைக்கும் போராட கூடியவர்கள் திமுகவினர் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

தென் சென்னை மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் நேற்றிரவு நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,

இங்கே நடைபெற்றது வெறும் பிரசார பொதுக்கூட்டம் அல்ல. இன எழுச்சிக்கான போர் முரசு கொட்டுகின்ற கூட்டம். இனம் என்று சொன்னால் ஏழை, எளியவர்களின் இனம். இந்த இடம் சிந்தாதிரிப்பேட்டை, சிங்கண்ண செட்டித்தெரு. எனக்கு மிக பழக்கமான இடம். இந்தப் பகுதியிலேதான் சென்னை மாநகரத்தினுடைய முதல் மேயரான அ.பொ.அரசு இருந்தார்.

இந்த கூட்டத்திற்கு நீங்களாக ஏன் வந்திருக்கிறீர்கள் என்றால், அடுத்த ஆட்சி எந்த ஆட்சி – வேற ஆட்சி வரப் போகிறதா அல்லது நம்ம ஆட்சியே தொடரப் போகிறதா என்ற கேள்விக்கு விடை காண நீங்கள் இவ்வளவு எழுச்சியோடு வந்திருக்கிறீர்கள். இந்த எழுச்சியை நான் நேற்று மதுரையில் கூட காணவில்லை.

மதுரையிலே மாபெரும் கூட்டம் என்று நம்மை பிடிக்காத ஆங்கில ஏடுகள் எல்லாம் இன்றைக்கு செய்தி வெளியிட்டிருக்கின்றன. மதுரையிலே பெரிய கூட்டம் என்று நம்மீது அன்பு இல்லாத ஆங்கில ஏடுகள் எல்லாம் கூட இன்றைக்கு செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஆனால் அதை வெல்லக்கூடிய அளவிற்கு அதை வெற்றி காணக்கூடிய அளவிற்கு நீங்கள் குழுமியிருக்கின்ற காட்சியை காணும்போது, நானே சொல்லி கொள்கிறேன், “வெற்றி நிச்சயம்”

தங்கபாலு தாமதமாக வந்தார் என்றாலும் வந்து விட்டார். எப்போதுமே காங்கிரஸ்காரர்கள் தாமதமாக வருவார்கள், தாமதமாக வந்தார்-தரமாக பேசினார்.

நான் சொல்கிறேன் உங்களுக்கு இந்த தேர்தலிலே மக்கள் அவர்களாகவே முன் வந்து இந்த ஆட்சி தொடர்வதற்கு வாக்களிக்க இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் வேண்டுமானால் வேறு எங்கேயும் தேடவில்லை. இதுவரையிலே இந்தத் தொகுதியில் சிந்தாதிரிப்பேட்டையில் இவ்வளவு பெரிய கூட்டம் குழுமியதில்லை. இது ஒன்றே போதும், நம்முடைய வெற்றிக்கு அடையாளம் இது தான்.

தமிழகத்திலே தி.மு.கழகம் சார்பில் எல்லா இடங்களிலும் நம்முடைய கூட்டணியினுடைய குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு நாளைக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னை தீவுத்திடலிலே வந்து உரையாற்றினார்.

அவரிடம் சட்டமன்ற தேர்தலை பற்றி பேசவில்லை-சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமையவிருக்கின்ற அரசு, அது தி.மு.கழக அரசாக இருந்தால் என்னென்ன கோரிக்கைகளை அம்மையாரே உங்களிடத்தில் வைக்கும் அந்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவேண்டும் என்ற என் நலனுக்காக அல்ல-யாருடைய நலனுக்காகவும் அல்ல-இந்த மாநிலத்தினுடைய நலனுக்காக தமிழனுடைய நலனுக்காக-தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்கான தேவைகளை எல்லாம் எடுத்து வைத்தேன்.

அப்பொழுது அங்கு நான் சொன்னேன், இலங்கையிலே வாழ்கின்ற எங்கள் தமிழர்கள் குடியமர்த்தப்படுவதிலே, பராமரிக்கப்படுவதிலே கால தாமதம் ஏற்படுகிறது. இலங்கை அரசு அவர்களுடைய தேவைகளை இன்னமும் முழுமையாக நிறைவு செய்யவில்லை. அங்கே சிங்களவர்களும், தமிழர்களும் சம நிலையிலே வாழ்வதற்கு சட்ட திருத்தத்தை கொண்டு வருவதாக இலங்கை அதிபர் சொல்லிய அந்த திருத்தத்தை கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

நான் என்னமோ இப்பொழுதுதான் இலங்கைத் தமிழர்களுக்காக கவலைப்படுவதைப் போல சில பத்திரிகைகளில் எழுதியிருக்கின்றார்கள். கேலி செய்திருக்கின்றார்கள், யார் யார் இலங்கை தமிழர்களுக்காக பாடுபடுகிறார்கள், இலங்கையிலே தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஒதுங்கி இருந்தவர்கள் யார்? தமிழர்கள் கொல்லப்பட்ட போது அது சரி, சரி என்று சொன்னவர்கள் யார்? இலங்கை தமிழர்கள் அங்கு வேதனைப்பட்டபோது “ஸ்கேல்” வைத்து அளந்து பார்த்து இந்த பிரச்சினையை அணுகிய கம்யூனிஸ்ட் நண்பர்களானாலும் அதைப்பற்றி நான் கவலைப்படவே மாட்டேன் என்று சொன்ன அதிமுக நண்பர்களானாலும் யோசித்து பார்க்க வேண்டும்.

தி.மு.கழகம் இலங்கை பிரச்சினையில் எடுத்த நிலை என்ன? தமிழன் அங்கே வாழ வைக்கப்பட வேண்டும். தமிழன் அவர்களுடைய ஊர்களிலேயிருந்து விரட்டப்பட்ட தமிழன், அங்கே நடைபெற்ற போராட்டத்தினால் ஊரை விட்டு ஓடிய தமிழன் மீண்டும் அந்த ஊருக்கு வரவேண்டும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற பொறுப்பை இலங்கையிலே இன்றைக்கு இருக்கின்ற அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம் என்றால் கடந்த காலத்திலே, இன்றைக்கு எங்களை கேலி செய்கிறவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? சென்னை சட்டசபையில் ஒரு தீர்மானமே வந்தது, ஜெயலலிதா ஆட்சியில். நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். ஆனால் நான் சொல்ல விரும்புகிறேன், அன்றைக்கு சென்னை சட்டமன்றத்தில், தமிழக சட்ட மன்றத்தில் தமிழக முதல்வராக இருந்த அம்மையார் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் என்ன? அந்த தீர்மானத்தை தி.மு.கழகம் ஆதரிக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை, அதை ஆதரித்து பேசவும் இல்லை. நடுநிலை வகித்தோம்.

அந்தத் தீர்மானம் இலங்கையிலே இருக்கின்ற பிரபாகரனை கைது செய்து கொண்டு வந்து, சென்னையிலே விசாரணை நடத்த வேண்டும்-தீர்மானம் போட்டது யார்? தி.மு.கழக அரசா? நெஞ்சிலே கை வைத்து சொல்லுங்கள், நெஞ்சு இருந்தால் கை வைத்து சொல்லுங்கள். நாங்களா அந்த தீர்மானம் போட்டோம், இல்லையே.

இலங்கையிலே ராஜபக்சேயினுடைய ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, நான் கண்ணீர் விட்டு கவிதை எழுதினேன், கட்டுரை தீட்டியிருக்கிறேன், மேடையிலே தீர்மானம் போட்டோம். அப்போது அம்மையார் ஜெயலலிதா என்ன சொன்னார்? இந்த போராட்டத்திலே சாகிறவர்கள் எல்லாம் விடுதலை வீரர்கள் அல்ல, விடுதலைப் புலிகள் அல்ல என்று சொன்னார். சொல்லிவிட்டு அப்படியே புலிகளாக இருந்தாலும் இலங்கையிலே இருக்கிற தமிழர்களாக இருந்தாலும் இதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை.

ஏனென்றால் போர் என்றால் ஜனங்கள் செத்து மடிவது சகஜம்- யார் சொன்னது, இலங்கை தமிழர்களை பார்த்து. ஜனங்கள் என்று சொல்லி , அவர்கள் செத்து மடிவது சகஜம் என்று சொன்ன ஜெயலலிதா, இன்றைக்கு இலங்கை தமிழர்களுக்கு நெருக்கமான உறவாக இருந்தால் அதைவிட அதிகமாக இலங்கை தமிழர்களுக்காக இங்கே பேசிய இன்னமும் பேசிக்கொண்டிருக்கிற சில நெடுமரங்களுக்கு அவர் வழிகாட்டியாக ஆகிவிட்டார்.

தி.மு.கழகத்தை பொறுத்தவரையில் அதுவும் அந்த கட்சியினுடைய தலைவராக இருக்கிற என்னை பொறுத்தவரையில் இன்று நேற்றல்ல-அறிஞர் அண்ணாவுடன் இணைந்து 1956ம் ஆண்டு இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்காக போர்க்கொடி ஏந்திய தந்தை செல்வா அவர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியவர்கள் நாங்கள். அதைப்போலவே விடுதலைப்புலிகள் ஜெகன், குட்டிமணி, தங்கதுரை இவர்களெல்லாம் என்னோடு நெருக்கமாக இருந்து அங்கே நடைபெறுகின்ற, அந்த விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவை தமிழக மக்கள் மூலமாக கோரி பெற்றார்கள்.

சகோதர யுத்தத்தால் அந்த போராட்டம் தோல்வியிலே முடிந்தது. இப்படி முடிந்துவிட்டதே என்ற ஏக்கம் எனக்கு இன்றைக்கும் உண்டு. அதனால்தான், அந்த ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள – இங்கே பிரதமர் வரும் போதெல்லாம், பிரதமரை காணும் போதெல்லாம் நம்முடைய அன்புக்குரிய சோனியா காந்தி அம்மையார் இங்கு வரும் போதெல்லாம் அவரிடத்திலே நான் பகிரங்கமாகவும், தனியாகவும் எடுத்துச் சொல்வது – இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களை காப்பாற்றுங்கள். அவர்கள் ஏதோ சில கலவரங்களால், பாதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணாமல், சுதந்திரப் போராட்டத்தில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் – அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க முன்வாருங்கள் என்று கேட்கிற அந்த விளக்கம்தான் இந்த கருணாநிதிக்கு இன்றைக்கும் உண்டு.

இதைச்சொல்வதற்கு காரணம், திராவிட முன்னேற்ற கழகம் இன்று நேற்றல்ல- உலகத்திலே எந்த ஒரு மாநிலத்திலும், எந்த ஒரு நாட்டிலும் அன்னியப்பட்டு கிடக்கிற அடித்தளத்து மக்களை சாதாரண- சாமான்ய மக்களை, விடுதலை முழக்கமிடுகின்ற மக்களை ஆதரிக்கின்ற இயல்பு கொண்டது என்பதும், வரலாறு கொண்டது என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட வரலாற்றுக்குரிய திமுக அதன் தலைவர் என்ற முறையில், நான் இந்த போராட்டத்திலே எத்தகைய முடிவு எடுக்க வேண்டியிருந்தது என்பதையும், எத்தகைய குழப்பங்களையெல்லாம் அப்போதிருந்த அதிமுக ஆட்சி விளைவித்தது என்பதையும், தயவு செய்து எண்ணிப்பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். உண்மையான தமிழன், தமிழன் அழிகிறானே என்று கவலைப்பட்ட தமிழன் கருணாநிதி.

திமுகவில் உள்ள தமிழர்கள்- இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களுக்காக என்றைக்கும் கண்ணீர் விடுபவர்கள்- என்றைக்கும் பரிந்து பேசக்கூடியவர்கள்- என்றைக்கும் போராடக் கூடியவர்கள் என்பதை உணர்ந்து அப்படிப்பட்ட தமிழர்களால் நடத்தப்படுகின்ற இந்தப் பேரியக்கத்தின் பிள்ளைகளாக உள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியினுடைய வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்தால் நான் சொன்ன இந்த வார்த்தைகளுக்கு மதிப்பு என்றார் கருணாநிதி.

முன்னதாக என்டிடிவி தொலைக்காட்சிக்கு கருணாநிதி அளித்த பேட்டியில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர் கட்சியை விட்டு நீக்கப்படுவார். திமுக கூட்டணியைப் பொறுத்தவரை நான் தான் முதல்வர் என்று சொல்லித் தான் வாக்கு கேட்கிறோம். என்னைத் தான் முதல்வர் என்று கூட்டணிக் கட்சிகளும் சொல்லி வாக்கு கேட்கின்றன என்றார்.

ஜெயலலிதாவுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, எங்கள் தேர்தல் அறிக்கையை திருடியிருக்கிறது அதிமுக. அய்யோ பாவம், ஜெயலலிதா என்று பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *