வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க சட்டமன்ற தொகுதி வாரியாக கண்காணிப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கார் மற்றும் வேன் போன்ற பிற வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்படுகின்றனவா? என்பதை கண்காணிப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் ஒரத்தநாடு, பாப்பாநாடு போன்ற பகுதிகளில் கண்காணிப்பு படையினர் அதிரடி வாகன சோதனை நடத்தினர்.
வாகனங்களின் எண்களை குறித்து கொண்ட அவர்கள், வாகனத்திற்குள் ஏதாவது பரிசு பொருள் இருக்கிறதா? என்றும் சோதனை செய்தனர். இந்தநிலையில் தஞ்சை காமராஜர் மார்க்கெட் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மகளிருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தஞ்சை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.
உடனே அவரது தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு அப்போது அந்த மண்டபத்தில் தி.மு.க.வினர் சிலர், பெண்களுக்கு விருந்து வைத்து சில்வர் தட்டில் ஜாக்கெட் துணி, மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வழங்கினர். அதிகாரிகள் வந்ததை தொடர்ந்து எல்லாவற்றையும் அப்புறப்படுத்த முயன்றனர். அதற்குள் அதிகாரிகள் பெண்களுக்கு கொடுத்தது போக மீதம் இருந்த 85 பரிசு பொருட்களை கைப்பற்றினர்.
அதிகாரிகள் வருவதற்கு முன்பு 150 பேருக்கு மேல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக யார் மீதும் வழக்கு தொடரப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Leave a Reply