திமுக-அதிமுக ஆட்சியை ஒப்பிட்டு பார்த்து வாக்களியுங்கள்-ப.சி

posted in: அரசியல் | 0

திருவண்ணாமலை: கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையை கிண்டல் செய்த ஜெயலலிதா இந்த முறை அதை ஏன் கிண்டல் செய்யாமல் காப்பி அடித்தார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் எ.வ.வேலுவை ஆதரித்து பிரச்சாரம் செய்து பேசிய அவர், கடந்த 2001-06ம் ஆண்டு அதிமுக ஆட்சியையும், 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை அமைப்பதில் சோனியா காந்தி , கருணாநிதி ஆகியோர் முக்கிய தூண்களாக விளங்கினர். பிரதமர் பதவி தன்னை நாடி வந்தபோதும் அதை மறுத்தவர் சோனியா காந்தி. முதல்வர் கருணாநிதியோ 70 ஆண்டு கால பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர்.

நம்மில் பலருக்கு வயது கூட 70 கிடையாது. 70 வருடமாக கலைஞர் யாருக்காக பேசினார், யாருக்காக எழுதினார். தமிழர்களுக்காக, தமிழர்களின் நலனுக்காக, தமிழர்களின் உரிமைக்காக, உலகெங்கும் வாழும் தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மற்றவர்களை அடக்கி ஒடுக்குவதை எதிர்த்து ஓய்வில்லாமல் எழுதி எழுதி அவரது கை விரல்கள் தேய்ந்தன. பேசிப் பேசி அவரது குரலே மாறிப் போனது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசுகள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளன. கடந்த தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியுமா என பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் நான் அதை நிறைவேற்ற முடியும் என உறுதியாகக் கூறினேன்.

அதன்படி நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்போது முன்வைக்கப்பட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கையும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். சென்றமுறை திமுகவின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா கிண்டல் செய்தார். இந்த முறை ஏன் கிண்டல் செய்யவில்லை?. மாறாக அதை ஏன் காப்பி அடித்தீர்கள்?.

மத்திய அரசுடன் இணக்கமாக சென்று நலத்திட்டங்களை நிறைவேற்றும் திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார் சிதம்பரம்.

அதிமுக அணியில் சுமுக உறவு இல்லை-இளங்கோவன்:

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் பேசுகிறார்கள். இதன் பின்னர் திமுக கூட்டணி கட்சிக்கான ஆதரவு அலை இன்னும் அதிகமாக வீசும்.

கடந்த தேர்தலின்போது திமுக அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளது. இப்போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் நல்ல திட்டங்கள் இருப்பதால், திமுக கூட்டணி அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறும்.

திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, நான், மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோர் பிரசாரம் செய்து வருகிறோம். எதிர் அணி கூட்டணியில் சுமுக உறவு இல்லை. அந்த கூட்டணியின் தலைவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்வது கூட இல்லை. இதை மக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *