தேர்தல் ஆணைய பிராண்ட் அம்பாசிடராக கங்குலிக்கு பதில் டோணி

கொல்கத்தா: தேர்தல் ஆணையத்தின் விளம்பரத் தூதராக கங்குலிக்கு பதில் டோணியும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை தேர்தல் ஆணையம் தங்களது விளம்பரத் தூத்ராக தேர்ந்தெடுத்தது.

மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று கங்குலியை வைத்து தேர்தல் ஆணையம் கடந்த மாதம் ஒரு படம் பிடித்தது.

அந்த விளம்பரப் படத்தை வெளியிடுவதற்கு முன்னதாக கங்குலியின் அரசியல் நடுநிலைமை குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. அவர் கம்யூனிஸ்ட் சார்பானவர் என்று சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், தேர்தல் ஆணையம் கங்குலியை விளம்பரத் தூதராக நியமித்ததற்கும் எதிர்ப்பு தெரிவி்த்தது.

இதனால் கங்குலி மன வருத்தம் அடைந்தார். அவர் தன்னை விளம்பரத் தூதர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அதை ஏற்ற தேர்தல் ஆணையம் அவரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி சுனில் குப்தா தெரிவித்தார்.

இதையடுத்து தற்போது இந்திய அணியின் கேப்டன் டோணியையும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமையும் தேர்தல் ஆணையம் விளம்பரத் தூதர்களாக தேர்வு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *