ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 14… எஸ்எஸ்எல்சி மே 25!

posted in: கல்வி | 0

சென்னை: மே 13-ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு, அடுத்த நாளே ப்ளஸ் டூ மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகளும் வெளியாகின்றன.

தமிழகம் முழுவதும் விடைத்தாள் திருத்தும் பணி இன்று முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து மே 14-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகளும், மே 25-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு, கடந்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி தொடங்கியது.

இந்த தேர்வை 1,890 மையங்களில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 205 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். அவர்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள். தனித் தேர்வர்கள் 57 ஆயிரத்து 56 பேர் ஆவார்கள். தேர்வு மார்ச் 25-ந் தேதி முடிவடைந்தது.

இந்த விடைத்தாள்கள் தமிழ்நாட்டில் 43 மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் மாதம் 23-ந் தேதி தொடங்கியது. இந்த இரு பாடங்களின் மதிப்பீட்டில் மட்டும், மாணவர்களின் பதிவு நம்பர் அப்படியே இருக்கும்.

ஆனால் மற்ற பாடங்களின் மதிப்பெண்கள் தொழிற்கல்வியில் சேருவதற்கு மிகவும் முக்கியம் என்பதால் மாற்று (டம்மி) நம்பர் கொடுத்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. அதன்படி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் முதலிய பாடத்திற்குரிய விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் மாதம் 28-ந் தேதி தொடங்கி முடிவடைந்துவிட்டது.

தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. அடுத்த கட்டமாக மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் வேலை துவங்குகிறது.

மே 14-ந் தேதி வெளியீடு

7.75 லட்சம் மாணவ-மாணவிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மே மாதம் 14-ந் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

எஸ்எஸ்எல்சி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை 6,520 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

8.5 லட்சம் மாணவ-மாணவிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே மாதம் 25-ந் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *