மே.வங்கத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்ட ராகுல் அழைப்பு

posted in: அரசியல் | 0

சிலிகுரி: மேற்கு வங்க மாநிலத்தில் 34 ஆண்டு காலம் தவறான ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முடிவு கட்டும்படி மக்களுக்கு, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே நக்சல் பாரி பகுதியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், திரிணமுல் கட்சி சார்பில் நடந்த பேரணியில் காங்., பொதுச் செயலர் ராகுல், நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மாநிலத்தில், 34 ஆண்டு காலம் தவறான ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கு முடிவு கட்டுங்கள்; பொது மக்களுக்கு உதவும் ஆட்சியை தேர்வு செய்யுங்கள். அந்த ஆட்சி உங்களுக்கு வளர்ச்சியையும், வளத்தையும் கொண்டு வரும். தவறான ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். பொது மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும். மக்கள் நலனை சிந்திக்கும் அரசாக இருக்க வேண்டும். ஆனால், இங்குள்ள அரசு அவர்களை பற்றியும், கட்சித் தொண்டர்களை பற்றியும் முதலில் கவலைப்படுகிறது; பின்னர் தான் மக்களைப் பற்றி கவலைப்படுகிறது.

விவசாயிகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் திருப்பிக் கொடுத்துள்ளோம். பழங்குடியினர் சட்டப்படி, அவர்களது நிலத்தை திருப்பிக் கொடுத்துள்ளோம். இது போன்ற மக்களுக்கான பெரிய திட்டங்களுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியின் மூலமே நாம் இதை பெற முடியும். நாட்டின் பிற மாநிலங்கள் நல்ல வளர்ச்சி பெற்று வருகின்றன. மேற்கு வங்கம் பின்தங்கியுள்ளது. இங்கு, மார்க்சிஸ்ட் ஆட்சி போக வேண்டும். அப்போது தான், நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள வளர்ச்சியைப் போன்ற பலனை மேற்கு வங்க மக்களும் அனுபவிக்க முடியும். கல்வியில் மாநிலம் பின்தங்கியுள்ளது. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது, 80 சதவீதம் பேர், இடையில் விலகிச் செல்கின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியினரின் கொள்கைகளால், மகாராஷ்டிரா, டில்லி, தமிழகம் ஆகிய மாநிலங்களைத் தேடி தொழிலதிபர்கள் செல்கின்றனர். நகரங்களில் 15 சதவீத வேலைவாய்ப்பும், கிராமங்களில் 10 சதவீத வேலையின்மையும் நிலவி வருகிறது. இவ்வாறு ராகுல் கூறினார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் முதற்கட்ட ஓட்டுப்பதிவு, வரும் 18ம் தேதி துவங்குகிறது. மாநிலத்தின் வடக்கில், ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய 54 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான தேயிலைத் தோட்டங்களில், அதிகளவில் பழங்குடியினர் பணியாற்றுகின்றனர். இவர்களை கவரும் வகையில் ராகுலின் பேச்சு அமைந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *