திருநெல்வேலி:ரயில் நிலையத்தில் இடம் பிடிக்கும் புரோக்கர் வேலையில், பாதுகாப்பு படை போலீசார் ஈடுபடுவதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவிற்கு இரண்டு மையங்கள் உள்ளன. காலை 8 மணிக்கு கவுன்டரில் நின்றால் தான் தத்கல் டிக்கெட்கள், வெளியூர் டிக்கெட்களை பெற முடியும். இதற்காக அதிகாலை 5 மணிக்கே வரிசையில் நின்று, பயணிகள் டிக்கெட் பெற்றுச் செல்வர்.டிக்கெட் கவுன்டருக்கு அருகிலேயே அலுவலகம் அமைத்துள்ள ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.,), இப்போது டிக்கெட் விற்பனையில் இறங்கியுள்ளனர்.
இதற்காக ஆர்.பி.எப்., கமாண்டன்ட், எஸ்.ஐ., என அட்டைகளில் பெயர் எழுதி வைத்து இடம் பிடிக்கின்றனர். காலை 8 மணிக்கு முதல் 10 டிக்கெட்கள், ஆர்.பி.எப்., மற்றும் உள்ளூர் புரோக்கர்களுக்குத் தான் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. இதை மீறி யாராவது பயணிகள் முன்னதாக வந்து டிக்கெட் கேட்டால், அவர்கள் மீது அத்துமீறி நுழைந்ததாக வழக்கு போடுவோம் என மிரட்டல் வேறு. ரயில்வே சொத்துகளை பாதுகாக்க வேண்டிய ஆர்.பி.எப்., ஊழியர்கள் தரம் தாழ்ந்து, டிக்கெட் விற்பனைக்காக இடம் பிடிக்கும் தொழிலில் ஈடுபடுவது வேதனையான விஷயம்.
Leave a Reply