ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி, ஜாமின் மறுக்கப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் இருக்கும் தன் மகள் கனிமொழியை முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி நேற்று நேரில் சந்தித்தார்.
பயப்படாமல் இருக்கும்படி ஆறுதல் கூறினார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் ஜாமின் மனுவை கடந்த வெள்ளியன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி நிராகரித்ததால், அன்று மாலையே திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். உடன் கனிமொழியின் தாயார் ராஜாத்தி டெல்லி வந்தார். மறுநாள், பாட்டியாலா நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜரான போது, மகளை கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தினார் ராஜாத்தி.
நீதிமன்றத்தில் நடைபெற்ற உருக்கமான சந்திப்புக்கு பின் கனிமொழியின் தந்தை கருணாநிதி எப்போது டெல்லிக்கு வருவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. கனிமொழி கைது செய்தி கேள்விப்பட்டவுடனே கருணாநிதி டெல்லிக்கு கிளம்பலாம் என முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் அன்றைய தினம் நிருபர்களிடம் பேசிய அவர், “தற்போதைக்கு டில்லி செல்லும் திட்டம் இல்லை” என்று கூறினார்.
அடுத்த நாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு மட்டும் பங்கேற்றார். இது தி.மு.க. – காங்கிரஸ் இடையே இணக்கமான உறவு இல்லை என்பதை வெளிப்படுத்தியது.
இந்நிலையில் நேற்று காலை சென்னையிலிருந்து டெல்லிக்கு சென்றார் கருணாநிதி. காலை 11.30 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்த அவர், அங்கிருந்து நேராக கான்மார்க்கெட் அருகில் உள்ள தாஜ்மான்சிங் நட்சத்திர ஓட்டலுக்கு விரைந்தார். அங்கு தி.மு.க. எம்.பி. க்கள் சிலருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். சிறிய ஓய்வுக்கு பின் மாலை 5 மணிக்கு ஓட்டலை விட்டு கிளம்பினார். அவருடன் ராஜாத்தி, கனிமொழியின் கணவர் அரவிந்தன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் சென்றனர். இரண்டு கார்கள் மற்றும் ஒரு எஸ்.பி.ஜி. வாகனம் புடைசூழ திஹார் சிறைக்கு சென்ற கருணாநிதி சரியாக 5.45 மணிக்கு உள்ளே சென்றார்.
பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்த கேட்டை தவிர்த்து விட்டு வேறு வழியாக கருணாநிதியும் அவருடன் வந்தவர்களும் உள்ளே சென்றனர். அப்போது சிறைக்கு வெளியே எம்.பி. க்கள் சிவா, ரித்தீஷ், ஜெயதுரை போன்றவர்கள் காத்திருந்தனர். கருணாநிதி உள்ளே சென்ற போது, அதற்கு முன்பாகவே சந்திப்புக்கான ஏற்பாடு முறைப்படி செய்யப்பட்டிருந்தது. அதாவது 1ம் எண் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜாவையும் 4 ம் எண் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சரத்குமார் ரெட்டியையும், கனிமொழி அடைக்கப்பட்டிருக்கும், 6ம் எண் சிறைக்கு அழைத்து வந்திருந்தனர். அருகில் உள்ள சிறை கண்காணிப்பாளர் அறையில் இவர்கள் மூன்று பேரும் காத்திருக்க கருணாநிதி அங்கு சென்றார். இந்த சந்திப்பின் போது கருணாநிதியுடன் ராஜாத்தி, அரவிந்தன், துரைமுருகன், பொன்முடி, சண்முகநாதன் ஆகியோர் உடனிருந்தனர். உடன் சென்றிருந்த டி.ஆர்.பாலு, வெளியிலேயே நின்று கொண்டிருந்தார்.
தன்னை சந்திக்க வந்த தந்தை கருணாநிதியை பார்த்ததும் கனிமொழி சற்று உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியதாகக் கூறப்படுகிறது. அவருக்கு பயப்படாமல் இருக்கும்படி கருணாநிதி ஆறுதல் கூறியதாகத் தெரிகிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திக்கும் ராஜாவிடமும் சில நிமிடங்கள் பேசிய கருணாநிதி, அவருக்கும் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், சரத்குமார் ரெட்டியிடமும் ஆறுதல் தெரிவித்துவிட்டு, தனது, 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு கருணாநிதி வெளியே வந்தார்.
மகளைச் சந்தித்த பின் கருணாநிதி நேராக விமான நிலையத்துக்கு சென்று சென்னைக்கு கிளம்ப திட்டமிட்டிருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தன் சென்னை பயணத்தை ரத்து செய்துவிட்டதாக அப்போது தான் தகவலும் கிடைக்க திரும்பவும் தாஜ்மான்சிங் ஓட்டலுக்கே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு மாறாக அந்த ஓட்டல் வேண்டாம் என்றும், வேறு ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யும்படியும் கருணாநிதி தெரிவித்து விட்டதாக கூறப்பட்டது.
ஓட்டலில் தங்கியிருந்த கருணாநிதியை, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்றிரவு சந்தித்துப் பேசினார். ஏற்கனவே, கருணாநிதி சென்னையில் அளித்த பேட்டியில், “சோனியாவை சந்திக்கப் போவதில்லை” என கூறியிருந்தார். சோனியா நேற்று ஒரு நாள் அவசரப் பயணமாக காஷ்மீர் சென்றிருந்தார். பிரதமர் மன்மோகனும் எத்தியோபியா பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ஸ்பெக்ட்ரம் வழக்கு நடைபெறும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராக, நேற்று கனிமொழி வந்த போது அவரை மத்திய ரசாயன அமைச்சர் அழகிரி மனைவி காந்தியும், அவரது மகன் துரை தயாநிதியும் சந்தித்தனர். கனிமொழி நிலைகண்டு கலங்கினார் காந்தி. அங்கிருந்த ராஜாத்தியுடனும் காந்தி பேசினார். அதேநேரத்தில் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினும் நேற்றிரவு டெல்லி வந்தார்.
Nalliah Thayabharan
கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று முழுப்பூசணிக்காயை எப்படியாவது சோற்றில் மறைப்பதில் உறுதியாக கருணாநிதி இருக்கிறார்
செய்யாத குற்றத்துக்காக கருணாநிதியின் குடும்ப சண்டையில் அப்பாவி 3 பேர் தினகரன் ஆபீசில் எரித்துக்கொல்லப் பட்டதை மறக்க முடியுமா….
கருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் பட்டம் வாங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலை கழக மாணவர் உதயகுமாரை கொன்றுவிட்டு அவன் போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட தந்தையை விட்டு ‘இறந்தது என் மகனே அல்ல ‘ என்று வாக்குமூலம் கொடுக்க பண்ணியதை மறக்க முடியுமா?
சம்பத், கண்ணதாசனை கட்சியில் இருந்து நீக்க செய்த சதிகளை மறக்க முடியுமா?, சட்ட மன்றத்தில் அனந்தநாயகி பேசும்போது குறுக்கிட்டு பொழிந்த ஆபாச வசைககளை மறக்க முடியுமா?, காமராஜர் மீது கிளப்பிய அவதூறுகளை மறக்க முடியுமா?; நெடுஞ்செழியனை ஓரம் கட்ட செய்த மோசடி முயற்சிகளை மறக்க முடியுமா?, ஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக்கொண்டு முகம்மது பின் துக்ளக் படம் வெளி வராது செய்ய சம்பந்தப்பட்ட கலைஞர்களை மிரட்டியதை மறக்க முடியுமா? கூலிப்படையை கொண்டு திரை அரங்கங்களில் இருக்கைகளை கிழிக்க வைத்து படம் ஓடாது தடுத்ததை மறக்க முடியுமா?; எம்ஜியாரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க முயன்றதை முடியுமா?, எம்ஜியாரை ராமாவரம் பாலத்துக்கு அருகில் தாக்கிட ரௌடிகளை அமர்த்தியதை மறக்க முடியுமா?
முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த போது, ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,சென்னையில் உள்ள மருத்துவமனையில் 1968 ஜனவரி 01 ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..?என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்ததை மறக்க முடியுமா?
ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே தனக்கு தெரியாது. தனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி கருணாநிதி பரபரக்க வைத்தார். நீதிமன்றத்துக்கும் போனார்…பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்..
எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ…எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று அனைத்தையும் இழந்திருக்கிறார் கருணாநிதி.
நல்லையா தயாபரன்