காளியின் மறு அவதாரமாக காணப்படும் மம்தா

posted in: அரசியல் | 0

மேற்கு வங்கத்தின் குடிசைப் பகுதி மக்களுக்காக களம் இறங்கி போராடிய மம்தா, இன்று, அம்மாநில முதல்வர் பொறுப்பில் அரியணை ஏறியுள்ளார்.

கடந்த, 1970ம் ஆண்டுகளில், ஜனதா கட்சி ஆட்சியின் போது, இந்திரா காந்திக்கு எதிரான அலை, நாடு முழுவதும் காணப்பட்டது. அப்போது தான், இந்திராவுக்கு ஆதரவாக, அரசியல் களத்தில் குதித்தார் மம்தா. துடிப்புள்ள இளம் பெண்ணாக, காங்கிரசில் வளைய வந்த மம்தாவை, மேலும் ஊக்கப்படுத்தியவர் ராஜிவ்.

கடந்த, 1984ல் நடந்த லோக்சபா தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சோம்நாத் சட்டர்ஜியை தோற்கடித்தார். கடந்த, 1997ல், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் சோமன்மித்ராவின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த மம்தா, பகிரங்கமாக அவரை எதிர்க்க துவங்கினார். அப்போதைய காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி தலைமையில், கோல்கட்டாவில் காங்கிரஸ் மாநாடு நடந்த போது, அதற்கு போட்டியாக தன்னுடைய தலைமையில் ஒரு மாநாட்டை நடத்தினார்.

இது குறித்து சீதாராம் கேசரியிடம் கேட்ட போது, “மம்தா என்னுடைய மகள் போன்றவர்’ என்றார். “பழம்பெருச்சாளி சீதாராம் கேசரி போன்றவர்களை நான் தந்தையாக கருதவில்லை’ என, பதிலடி கொடுத்தார் மம்தா. மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தாலும், அடிதட்டு மக்களின் பிரச்னை என்றால், சாலையில் உட்கார்ந்து போராடும் குணம் படைத்த மம்தாவின் நடத்தையை கண்டு, இடதுசாரி கட்சி அலறியது.

நரசிம்மராவ் அமைச்சரவையில், மம்தா இடம் பெற்றிருந்த போது, மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டரால், வாய் பேச இயலாத, காதுகேளாத பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இதற்காக, கோல்கட்டாவில், முதல்வர் ஜோதிபாசுவின் அலுவலகத்தின் முன், பெரிய போராட்டம் நடத்தினார் மம்தா. ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக மம்தா தொடர் போராட்டங்கள் நடத்தியதால், அவரை, அம்மாநில மக்கள், காளியின் மறு அவதாரமாக தான் பார்த்தனர். எவ்வித பின்விளையும் பற்றி கவலைப்படாமல் களம் இறங்கும் மம்தாவின் துணிச்சலால், திரிணமுல் காங்கிரஸ், 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், கணிசமான அளவில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மேலும் வளர்ந்து, தற்போது, இடதுசாரி கட்சியை ஆட்சியிலிருந்து வீழ்த்தி, மம்தாவுக்கு முதல்வராக மகுடம் சூட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *