ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
கடந்த 4 மாதங்களாக அவர் டெல்லி திகார் ஜெயிலில் சிறை எண். 6-ல் உள்ள வார்டு எண்.9-ல் வைக்கப்பட்டுள்ளார். தினமும் காலை அவர் திகார் ஜெயிலில் இருந்து பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படுகிறார்.
மாலை விசாரணை முடிந்ததும் திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறார். அவரது ஜாமீன் மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு முன்பே நிராகரித்து விட்டது. எனவே அடுத்த கட்டமாக எத்தகைய சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது குறித்து அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய ஆ.ராசா முடிவு செய்துள்ளார். விரைவில் அவரது வக்கீல் ஜாமீன் மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஆ.ராசாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெறும். அப்போது கோர்ட்டில் ராசா தரப்பு வாதங்களும் சி.பி.ஐ. தரப்பு வாதங்களும் இடம் பெறும்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தீர்ப்பளிப்பார். டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் போது, தானே ஆஜராகி கோர்ட்டில் வாதாட ஆ.ராசா முடிவு செய்துள்ளார். சட்டம் படித்துள்ள ஆ.ராசா இதற்காக ஆதாரங்களை திரட்டி வருகிறார். குறிப்பாக ஆ.ராசா 18 கடிதங்களை டெல்லி ஐகோர்ட்டில் சமர்ப்பித்து வாதாடுவார் என்றுகூறப்படுகிறது.
அந்த 18 கடிதங்களும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ஆ.ராசாவுக்கும் இடையே பரிமாறி கொள்ளப்பட்ட கடிதங்களாகும். இந்த 18 கடிதங்களும் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை ஒதுக்கீடுகளை பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதலின் பேரில் ராசா செய்ததாக அந்த கடிதங்களில் உள்ள தகவல்கள் தெரிவிப்பதாக தெரிகிறது.
எனவே மேலிட அனுமதியுடனே ஸ்பெக்ட்ரம் உரிமங்களை கொடுத்ததாக ராசா டெல்லி ஐகோர்ட்டில் வாதாடுவார் என்று கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடு செய்யும் போது தான் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனவே நான் நிராபராதி என்று அழுத்தம் திருத்தமாக வாதாட ராசா தீர்மானித்துள்ளார்.
இவை தவிர ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோருக்கு எழுதிய கடிதங்களையும், ஆதாரமாக காட்ட ஆ.ராசா திட்டமிட்டுள்ளார்.ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஆ.ராசா எழுதிய 3 கடிதங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
அந்த 3 கடிதங்களையும் தனக்கு வலுவான ஆதாரமாக ஆ.ராசா கருதுகிறார். இந்த கடிதங்களை ஆ.ராசா டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்து வாதாடும் போது, மத்திய அரசுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
Leave a Reply