பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

posted in: உலகம் | 0

லண்டன் : “”பாகிஸ்தானில் மேலும் ஒரு பயங்கரவாதத் தலைவர் இருப்பது கண்டறியப்பட்டால், அபோதாபாத் ராணுவ நடவடிக்கை போல இன்னொரு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று லண்டன் வந்த அவர், “பி.பி.சி.,’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தான் ஒரு இறையாண்மை உள்ள நாடு என்பதை நான் உணர்ந்துள்ளேன். அதேநேரம், பலனை அனுபவிப்பதற்காக, எங்களைச் சேர்க்காமல், சில நடவடிக்கைகளை எடுக்க அந்நாடு முனைந்தால், அதை அமெரிக்கா அனுமதிக்காது.

அல்-குவைதாவின் முக்கிய தலைவர்கள் அல்லது முல்லா ஒமர் போன்றவர்கள், பாகிஸ்தானிலோ அல்லது பிற நாட்டிலோ இருப்பது தெரிய வந்தால், தேவைப்படும் பட்சத்தில் அமெரிக்காவே முடிவெடுத்து நடவடிக்கை எடுக்கும். அமெரிக்காவை பாதுகாப்பது தான் எங்கள் வேலை. பாகிஸ்தானின் இறையாண்மையை மதிக்கிறோம். ஆனால், அமெரிக்காவின் மக்களையோ, அதன் நட்பு நாடுகளின் மக்களையோ சிலர் கொல்ல திட்டமிட்டால், அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

பாகிஸ்தானின் தவறான எண்ணம்: அச்சுறுத்தல் என்பது வெளியில் இருந்து வராது. மாறாக உள்ளேயே தான் இருக்கிறது. ஆனால், பாக்., இந்தியாவை மிகப் பெரிய அச்சுறுத்தலாக நினைக்கிறது. இந்த எண்ணம் தவறானது. இந்தியா – பாக்., இடையேயான அமைதி, பாகிஸ்தானுக்கு மிகவும் நல்லதாக அமையும். ஒவ்வொரு பிரச்னையையும், “இந்தியா லென்ஸ்’ வழியாக பார்ப்பதை பாக்., நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் பொருளாதார முன்னேற்றத்திற்கு உகந்த வழி. இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *