பாகிஸ்தான் மீது நடத்தப்படும் தாக்குதல்:இறையாண்மை பாதிப்பதாக சீனா கருத்து

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்:”பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலும், சீனா மீது நடத்துவது போன்றது.

பாகிஸ்தான் நாட்டின் இறையாண்மைக்கு அமெரிக்கா மதிப்பு அளிக்க வேண்டும்’ என்று அமெரிக்காவிடம், சீனா வலியுறுத்தியுள்ளது.வாஷிங்டனில், கடந்த வாரம், அமெரிக்கா – சீனா இடையே பொருளாதார மற்றும் இரு நாட்டு உறவுகள் தொடர்பான பேச்சு வார்த்தை நடந்தது. இதில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொண்டார். அப்போது, “பாகிஸ்தான் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அமெரிக்கா மரியாதை அளிக்க வேண்டும்.
பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலும், சீனா மீது நடத்தப்படுவது போன்றது’ என்று அமெரிக்க பிரதிநிதியிடம் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்ததாக, “தி நியூ டெய்லி’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இந்நிலையில், இஸ்லாமாபாத்தில், சீனா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் இடையே, நேற்று முன்தினம் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது, பாகிஸ்தான் மீதான அமெரிக்கா தாக்குதல் பற்றி வாஷிங்டனில் நடந்த பேச்சு வார்த்தையின் போது, அந்நாட்டிடம் எடுத்துரைக்கப்பட்டதாக, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியிடம், சீன பிரதமர் வென் ஜியாபோ தெரிவித்தார்.
இரு நாட்டு பிரதிநிதிகள் மற்றும் பிரதமர்கள் கலந்து கொண்ட கூட்டம், 45 நிமிடம் நீடித்தது. இதில், “இரு நாட்டு உறவுகள், பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் சீனா வழங்கும் என்று கிலானிக்கு, வென் ஜியாபோ உறுதி அளித்தார்.
இக்கூட்டத்திற்கு பின், பத்திரிகையாளர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் கிலானி அளித்த பேட்டியில், “தீவிரவாதத்துக்கு எதிரான போரில், பாகிஸ்தானின் தியாகத்தை, சீனா அங்கீகரித்துள்ளது. சர்வதேச அளவில் பாகிஸ்தானின் இந்த நோக்கத்திற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டுடன் உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தியுள்ளது. தைவான், திபெத் தொடர்பான சீனாவின் கொள்கைகளை ஆதரிக்கிறோம். ஐ.நா., மறுசீரமைப்பு தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து ஆலோசிக்கும்.பாகிஸ்தானில், இரு நாடுகளும் இணைந்து அணு சக்தி, மின்சாரம் உட்பட பல்வேறு மின் உற்பத்திகளை நீண்ட கால திட்ட அடிப்படையில் மேற்கொள்ளும்’ என்றார்.
சீன பிரதமர் வென் ஜியாபோ கூறுகையில், “பாகிஸ்தான் வரலாற்றிலேயே, தற்போது அந்நாடு இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், விரைவில் சிறப்பு பிரதிநிதிகள் கொண்ட குழு, இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இரு நாடுகள் இடையிலான 60 ஆண்டுகள் உறவை கொண்டாடும் வகையில், சீனாவின் மூத்த அமைச்சர் இந்த குழுவில் பங்கு பெறுவார்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *