வாஷிங்டன்:அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனுக்கு, பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்த தகவல் அம்பலமாகியுள்ளதை அடுத்து, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதிரடி நடவடிக்கையாக, அந்நாட்டில் உள்ள தனது தூதரகம் மற்றும் துணை தூதரக அலுவலகங்களை அமெரிக்கா இழுத்து மூடியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரங்கள், 2001ல், விமானங்கள் மூலம் மோதி தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதல் உட்பட, உலக நாடுகள் பலவற்றில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தவர், அல்-குவைதா தலைவர் பின்லாடன்.உலகின் பல்வேறு நாடுகளிலும், ஒசாமாவை, அமெரிக்க படைகள் சல்லடை போட்டுத் தேடிவந்தன. இரட்டை கோபுர தாக்குதல் நடந்து, பத்தாண்டுகளுக்கு பின், ஒரு வழியாக, அவர் பதுங்கியிருந்த இடத்தை, அமெரிக்க புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்தனர்.அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான, பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் தான், கடந்த சில மாதங்களாக, ஒசாமா பின்லாடன் பதுங்கியிருந்தார்.கடந்த 1ம் தேதி அதிகாலையில், பின்லாடன் பதுங்கியிருந்த இடத்தில், அமெரிக்க கமாண்டோ படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இச்சண்டையில், பின்லாடனும், அவருடன் இருந்தவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரியாமலேயே, இந்த தாக்குதலை அமெரிக்கப் படையினர் வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். அதிபர் ஒபாமா, இதை, “நீதி நிலைநாட்டப்பட்டது’ என்றார்.
பாக்., மீது சந்தேகம்: பின்லாடன் கொல்லப்பட்டதை அடுத்து, அவரைத் தங்க வைத்து ஆதரவு தந்ததாக, பாகிஸ்தான் மீது, உலக நாடுகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. “அபோதாபாத்தில் பின்லாடன் தங்கியிருந்தது எங்களுக்கு தெரியாது’ என, பாகிஸ்தான் மறுத்தாலும், அந்த நாட்டின் நடவடிக்கைகள் மீது, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
பின்லாடன் பதுங்கியிருந்த இடத்துக்கு மிக அருகில், பாகிஸ்தான் ராணுவ அகடமியும் உள்ளது. இத்தனை பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்குள், அவர் பதுங்கியிருந்தது, பாகிஸ்தான் அரசுக்கும், அதன் புலனாய்வு அமைப்புகளுக்கும் எப்படி தெரியாமல் போனது என்ற சந்தேகத்தை, அமெரிக்காவும், மற்ற உலக நாடுகளும் எழுப்பியுள்ளன.
அமெரிக்க புலனாய்வுத் தலைவர் ஜான் ப்ரினான் கூறுகையில், “இஸ்லாமாபாத்திற்கு அருகே, ஒசாமா தங்கியிருந்தது எப்படி? பாக்., அரசு ஆதரவின்றி அது நடக்குமா என்ற சந்தேகம் உள்ளது. இதை நாங்கள் பாகிஸ்தானிடம் கேட்போம்’ என்றிருக்கிறார்.
தூதரகம் மூடல்: தங்களுடைய நெருங்கிய கூட்டாளியாக இருந்தும், தங்களின் முதல் எதிரியான பின்லாடனுக்கு, பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து விட்டதோ என்ற சந்தேகம், அமெரிக்க அதிகாரிகளிடையே எழுந்துள்ளது. இதன் முதல் கட்டமாக, பாகிஸ்தானில் செயல்படும் அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகங்களை அமெரிக்கா இழுத்து மூடியுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும்வரை, தூதரக அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும் என, அமெரிக்கா கூறியுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் கசப்பு அதிகரிக்கும்.இனிமேல், பாகிஸ்தானுடனான, அமெரிக்காவின் கொள்கைகள், அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக, வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை வலியுறுத்தும் விதம், அமெரிக்க செனட்டர்கள் பலரும், பாகிஸ்தானுக்குத் தரப்படும் நிதி உதவியை நிறுத்தக்கோரி, குரல் எழுப்பத் துவங்கி விட்டனர்.
உலக நாடுகள் கண்டிப்பு: பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன.
ஜெர்மன் அதிபர் ஆஞ்சலா மெர்கெல் கூறுகையில், “உலக நாடுகளால் தேடப்படும் பயங்கரவாதியான பின்லாடன், பாகிஸ்தானின், ராணுவ பாதுகாப்பு மிகுந்த பகுதியில் தங்கிருந்தார் என்ற செய்தி, கவலை அளிக்கிறது. நாம் எதிர்பார்க்காத ஒரு இடத்தில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பர் என, பயங்கரவாத எதிர்ப்பு படையினர் வழக்கமாக கூறுவர். அது உண்மையாகியுள்ளது’ என்றார்.
பாக்.,கிற்கு கடும் நெருக்கடி: அமெரிக்க தூதரகங்கள் மூடப்பட்டது, உலக நாடுகளின் கண்டனம் என, அனைத்து தரப்பிலிருந்தும், எதிர்ப்பு எழுந்துள்ளதால், பாகிஸ்தான் அரசுக்கு, பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான், பயங்கரவாதிகளின் மையமாக செயல்படுவதாக, ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது, பின்லாடன் அங்கு பதுங்கியிருந்தது, வெளிச்சத்துக்கு வந்ததன் மூலம், ஏற்கனவே கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டு, உறுதி செய்யப்பட்டது போல் ஆகி விட்டது.
Nalliah Thayabharan
பின்லேடனின் மரணத்தை அறிவிக்கையில் ஜனாதிபதி பராக் ஒபாமா “நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக’ வலியுறுத்தினார்.
ஒரு கடற்படை அதிரடி குழுவால் நடத்தப்பட்ட அவரின் படுகொலை துளியும் கூட நீதியோடு சம்பந்தப்பட்டதல்ல.
அல்ஹைடா, அமெரிக்க உளவுத்துறையின் நிதியுதவி மற்றும் ஆயுத உதவியுடன்தான் ஸ்தாபிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் பின்வாங்கிய பின்னர் பொஸ்னியாவிலும் கொசோவாவிலும் நிகழ்ந்த யுத்தங்களில் அமெரிக்க இராணுவ உளவுப்பிரிவின் உடைமைகளாக பின்லேடனும், அல்ஹைடாவும் உதவினர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கையில் அடிக்கடி நிகழும், இன்றைய கூட்டாளி நாளைய எதிரியாகிறான் என்பதைப் போலவே சோவியத் ஒன்றியத்திற்கு குழிபறிக்க ஒரு கருவியாக வாஷிங்டனால் தூண்டிவிடப்பட்ட இஸ்லாமிய கிளர்ச்சி, இறுதியில் மத்தியகிழக்கிலும் குறிப்பாக சவூதி அரேபியாவிலும் அதிகரித்துவரும் அமெரிக்காவின் இருப்பிற்கு விரோதமாக மாறியது. கொல்லப்பட வேண்டிய அமெரிக்காவின் எதிரியாக சித்திரிக்கப்பட்ட பின்லேடனுக்கும் அமெரிக்க உளவுப்பிரிவுக்கும் இருந்த இந்த நீண்டகால நெருக்கமான உறவின் வரலாறு, ஊடகங்களால் மூடிமறைக்கப்பட்டது.
செப்ய்டம்பர் 11, 2001இல் நிகழ்ந்த பரிதாபகரமான சம்பவங்களுக்கு குற்றஞ்சாட்டப்பட்ட 9/11 விமானக்கடத்தல்காரர்களில் யாருமே ஆப்கானிஸ்தானில் இருந்தோ அல்லது ஈராக்கில் இருந்தோ வரவில்லை.
நல்லையா தயாபரன்