ஸ்டிரைக்கில் ஈடுபட்டு பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது: ஏர்இந்தியா கண்டிப்பு

posted in: மற்றவை | 0

புதுடில்லி:”ஏர்-இந்தியா விமான பைலட்டுகள் ஸ்டிரைக்கை தொடர்ந்தால், வேலைக்கு வராவிட்டால், சம்பளம் இல்லை’ என்ற கொள்கையை அமல்படுத்த போவதாக, ஏர்-இந்தியா அறிவித்துள்ளது.

சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வரும், ஏர்-இந்தியா நிறுவனத்தின் விமான பைலட்டுகள், தொடர்ந்து 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமாதான பேச்சுவார்த்தைக்கு இருதரப்பினருமே ஒத்துவரவில்லை.”கோர்ட்டில் பார்த்து கொள்வோம்’ என, நிர்வாகமும், “பிரதமரிடம் முறையிடுவோம்’ என, பைலட்டுகள் வரிந்து கட்டி கொண்டு நிற்கின்றனர். இவர்களுக்கு மத்தியில், விமானங்கள் செயல்படாததால், பயணிகள் சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர். இதை பயன்படுத்தி, தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை தொடர்கின்றனர். இதனால், ஏர்-இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த ஸ்டிரைக் தொடர்பாக டில்லி ஐகோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணையில், நேற்று இருதரப்பையுமே நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர். ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வருவதில், இருதரப்புக்குமே ஆர்வம் இல்லை என, நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

நோட்டீஸ்: ஏற்கனவே இந்த பிரச்னை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளதால், ஸ்டிரைக்கில் ஈடுபட்டதை கண்டித்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒன்பது பேருக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி பி.டி.அகமது உத்தரவிட்டார். அடுத்த விசாரணையின் போது, ஒன்பது பேரும் ஆஜராக வேண்டும். நோட்டீசுக்கு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.”குறிப்பிட்ட கால கெடுவுக்குள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என்ற உறுதிமொழியை நிர்வாகம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.அவ்வாறு அறிவித்தால், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பைலட்டுகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஏர்-இந்தியா நிர்வாக அதிகாரி ஒருவர் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “பைலட்டுகள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில், வேலைக்கு வராவிட்டால், சம்பளம் இல்லை என்ற கொள்கையை அமல்படுத்த உள்ளோம். எனவே, வேலைக்கு திரும்பினால், ஏப்ரல் மாத சம்பளம் கிடைக்கும். இல்லையெனில், சம்பளம் கிடைக்காது’ என்றார்.ஏர்-இந்தியா, தற்போது, 35 முதல் 40 வரையிலான விமானங்களை மட்டுமே இயக்குகிறது. உள்நாட்டில் விமானங்களுக்கான முன்பதிவு முடிந்து விட்டது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பைலட்டுகள் கோர்ட் உத்தரவை மீறி செயல்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்காக காத்திருக்கிறோம். இதற்கான நடவடிக்கைகளை துவக்கிவிட்டோம். பைலட்டுகள் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை. ஸ்டிரைக் குறித்து நாள்தோறும், பிரதமருக்கு தகவல் தெரிவித்து வருகிறோம்’ என்றார்.

ஸ்டிரைக் காரணமாக தனியார் விமான நிறுவனங்கள், ஏர்-இந்தியா பயணிகளுக்கு, 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை தங்கள் விமானத்தில் இடம் அளித்துள்ளன. மேலும், ஏர்-இந்தியா பைலட் ஸ்டிரைக் காரணமாக, நாள்தோறும் நிர்வாகத்திற்கு 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *