மின் திருட்டு, மின்வாரிய சொத்து திருடுவோர் மீது குண்டாஸ்! : தயாராகிறது அரசின் அடுத்த திட்டம்

posted in: மற்றவை | 0

மின் திருட்டால் நஷ்டமடைந்துள்ள தமிழக மின்வாரியம், மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள மின்சார பாதுகாப்புப் படை, விரைவில் அதிரடி,”ரெய்டு’களை துவங்க உள்ளது. தமிழகத்தில் மின்திருட்டால், மின்வாரியத்திற்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மின் மீட்டர்களை சேதப்படுத்துதல், காந்தம் வைத்து மீட்டர்களை ஓட விடாமல் வைத்தல், மீட்டருக்கான இணைப்பை ரத்து செய்தல், டிரான்ஸ்பார்மர்களில் கொக்கி போடுதல் என, பல வகைகளில் மின்சாரம் திருடப்படுகிறது. மின்திருட்டையும், பகிர்மானத்தின் போது ஏற்படும் மின் இழப்பையும் தடுத்தாலே, ஓரளவு நஷ்டத்தை மின்வாரியம் சரிக்கட்ட முடியும். முதற்கட்டமாக, மின் திருட்டை தடுக்கும் நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, மின்வாரிய சேர்மனின் நேரடி கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள 18 பறக்கும் படைகள், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய நான்கு இடங்களில் செயல்படுகின்றன.
கடந்த ஆண்டில் மட்டும் பறக்கும்படை ரெய்டில், 6,230 வழக்குகள் பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில், 13.14 கோடி ரூபாய் மதிப்பிலான திருட்டு நடவடிக்கைகளை கண்டுபிடித்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், தமிழகம் முழுவதும், 1,642 மின் திருட்டு வழக்குகள் பதிந்து, இந்திய மின்சார சட்டம் 2003ன் படி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மின்சார பாதுகாப்புப் படை அமைக்க, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான முடிவுகள், மின்வாரிய 14வது கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு, ஓய்வு பெற்ற 400 ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
இது மட்டுமின்றி, தமிழக மின்வாரியத்தில் செயல்படும் கண்காணிப்பு (விஜிலென்ஸ்) போலீசாரும், மின் திருட்டை தடுக்கும் நடவடிக்கையை துவங்கியுள்ளனர். வரும் காலங்களில், தொடர்ந்து மின் திருட்டில் ஈடுபடும் நிறுவனங்களின் மின் இணைப்புகளை, நிரந்தரமாக ரத்து செய்யவும், நிறுவனங்களின் அனைத்து அங்கீகாரங்களையும் ரத்து செய்ய பரிந்துரைக்கவும், மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
மின் திருட்டில் ஈடுபடுவோர் மற்றும் மின்வாரிய பொருட்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய பறக்கும்படை பொறியாளர் ஒருவர் கூறியதாவது: மின் திருட்டை தடுப்பதின் மூலம், 15 சதவீத நஷ்டத்தை சரிக்கட்ட முடியும். இதை கருத்தில் கொண்டு, மின் திருட்டை தடுக்க, 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். திருட்டில் சிக்குவோர் மீது, இந்திய மின்சார சட்டம் 2003 பிரிவு 135(1) சி அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறோம். இரண்டு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தவறை ஒப்புக் கொண்டு, மின்வாரிய நடவடிக்கைக்கு சமரசமாக ஒத்துழைப்போரிடம், மின்வாரியம் நிர்ணயிக்கும் கட்டணத்தை அபராதமாக பெற்று, எச்சரித்து அனுப்புகிறோம். இரண்டாவது வகையில், ஒன்றுக்கு மேற்பட்ட முறை தவறு செய்வோர் மீது வழக்கு பதிந்து, கோர்ட் மூலம் நடவடிக்கை எடுப்பதாகும். இதில், பெரும்பாலானோர், தவறை ஒப்புக் கொண்டு அபராதம் செலுத்தி விடுவர்.
தற்போது, மின்சார பாதுகாப்பு படையும் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், பலமுறை பிடிபடுவோரை போலீசாரிடம் ஒப்படைத்து, மின்சார சட்டம் மட்டுமின்றி, இந்திய குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எரிசக்தித் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவைப் போல், மின்திருட்டில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீதும், மின் இணைப்பு பெட்டியின் கதவுகளை திருடுதல், மின்வாரிய கேபிள்களை திருடுதல் போன்ற மின்வாரிய சொத்துக்களை திருடுவோர் மீது, குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம்’ என்றார்.

சட்டம் சொல்வதென்ன? : இதுகுறித்து, சட்டத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, தமிழகத்தில் 1982 சட்டம் 14 என்ற சட்டத்தின் அடிப்படையில் தான், குண்டர் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. “சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோர், கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல், வனச்சட்டத்துக்கு எதிரான செயல்கள், ரவுடி அராஜகம், விபசாரம், நில அபகரிப்பு, போலி வீடியோ தயாரித்தல் ஆகிய குற்றங்களுக்கு எதிரான சட்டவிரோத தடுப்பு தமிழக சட்டம் 1982(14)’ என, இச்சட்டம் அழைக்கப்படுகிறது. இதில், போலி வீடியோ தயாரிப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் சட்டம், கடந்த 2004ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா உத்தரவால் திருத்தம் செய்யப்பட்டதாகும்.
தற்போது, ஆட்சி மாற்றத்திற்கு பெரும் காரணியாக விளங்கிய மின் பிரச்னையை சரிசெய்ய, மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த சட்டத்தில், “மின்துறைக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள்’ என்பதை இணைத்து, சட்டசபை கூடுவதற்கு முன் அவசரமாக தேவைப்பட்டால், கவர்னர் ஒப்புதலுடன் திருத்த (ஆர்டினன்ஸ்) சட்டமாக கொண்டு வரலாமா என, மின்துறை ஆலோசனை நடத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *