வருமான வரித்துறையில் பல ஆயிரம் பணியிடங்கள் காலி :பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : வருமான வரித்துறையில், பல ஆயிரம் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், வழக்கமான பணிகளை சரிவர மேற்கொள்ள முடியாமல், அந்தத் துறையினர் திணறி வருகின்றனர்.

கறுப்புப் பணம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் போன்ற பல்வேறு விசாரணைகள் தவிர, வழக்கமான பணிகளான, வரி மீட்பு, கூடுதலாக கட்டிய வரியை திரும்பத் தருவது, வரி குறித்த கணக்கெடுப்பு மற்றும் ஆய்வுகள், வரி கட்டாதவர்கள் பற்றிய கணக்கெடுப்பு போன்றவற்றை வருமான வரித் துறை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், தற்போது வருமான வரித்துறையில், பல ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக, அந்தத் துறையின் பணியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட, குற்றவியல் புலனாய்வு மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதை கண்காணிக்கும் பிரிவு போன்றவை பெரும் அவதிப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து வருமான வரித்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஏ.கே.கனோஜியா கூறுகையில், “”ஒட்டு மொத்தமாக வருமான வரித்துறையில், 22 சதவீதம் அதாவது, 53 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்தப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்தும் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன,” என்றார்.

போதிய பணியாளர்கள் இல்லாததால், வழக்கமான வரி தொடர்பான பணிகள் கூட பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இதனால் 2010-2011ம் நிதியாண்டில், 2 லட்சத்து, 63 ஆயிம் கோடி ரூபாய் வரி வசூலிக்கப்படாமல் உள்ளது. இத்தகவலை மத்திய தலைமை தணிக்கை அதிகாரி, தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை விரைவில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பார்லிமென்ட் நிலைக் குழுவும் இந்தப் பணியாளர்கள் பற்றாக்குறையைச் சுட்டிக் காட்டி, விரைவில் அதைத் தீர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *