பொள்ளாச்சி : “”தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்,” என, தொழில்துறை அமைச்சர் வேலுமணி பேசினார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம், இதர ஊடக பிரிவுகள் சார்பில் மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் பாரத் நிர்மாண் கண்காட்சி பொள்ளாச்சியில் துவங்கியது.
கண்காட்சியை தமிழக தொழில்துறை அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் ஐந்தாண்டுக்கு பிறகு தற்போது தான் மக்கள் ஆட்சி மலர்ந்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். ஜெ., ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் தான் மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட்டன. தற்போது, மகளிர் குழுக்களுக்கு கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மகளிர் குழுக்களுக்கான கடனுதவி மானியமும் அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற ஜெ.,யின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது. தமிழகத்திற்கு அதிக நிதி பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் இரண்டு முறை டில்லி சென்று வலியுறுத்தியுள்ளார். ஆனால், கடந்த ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்காக டில்லி செல்லவில்லை. அவர்களுக்கு தேவையான பதவிகளை கைப்பற்றுவதற்காக மட்டுமே டில்லி சென்றனர். இவ்வாறு, அமைச்சர் வேலுமணி பேசினார்.
கண்காட்சியில் மொத்தம் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி இன்று (29ம் தேதி) நிறைவடைகிறது. நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் முத்துக்கருப்பண்ணசாமி, தாமோதரன், அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சுகுமாரன், கோவை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மதிவாணன், எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு திட்ட மேலாளர் முகமதுஅலி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இளங்கோவன், டாக்டர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காத்திருந்த பெண்கள்: கண்காட்சியை துவக்கி வைக்க அமைச்சர் வேலுமணி காலை 10.30 மணிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால், மகளிர் குழுவினர் கண்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணியாக சென்று, திருமண மண்டபத்தில் திரண்டனர். அமைச்சர் வரும் வரையிலும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஆனால், அமைச்சர் மதியம் 2.40 மணிக்கு வந்தார். தனது பேச்சை 15 நிமிடத்தில் நிறைவு செய்து விட்டு கிளம்பி விட்டார். இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நாள் முழுவதும் காத்திருந்தனர்.
Leave a Reply