நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை, வரும் 2015ம் ஆண்டில், 80 சதவீதமாக உயரும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
டில்லியில், பெண்கள் கல்வி குறித்த சர்வதேச மாநாட்டின் நிறைவு விழா, நேற்று முன்தினம் நடந்தது. இதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது: நாட்டில், தற்போது கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை, சராசரியாக 74 சதவீதமாக உள்ளது. பிரதமரின், “சாக்சர் பாரத்” மிஷன் கல்வித் திட்டத்தின் மூலம், இந்த எண்ணிக்கை வரும் 2015ம் ஆண்டில், 80 முதல் 85 சதவீதமாக உயரும். இதுவே மிகப்பெரிய சாதனை. “சாக்சர் பாரத்” திட்டத்தின் மூலம், பெண்கள் உட்பட, 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.
வருங்காலங்களில், 7 கோடி ஆண்களும், 70 லட்சம் பெண்களும் பயனடைவர். சாக்சர் பாரத் திட்டம், மத்திய அரசால் கடந்த 2009 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. வயது வந்தவர்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வாறு, கபில் சிபல் கூறினார்.
Leave a Reply