சென்னை:”தேசிய மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்ததே, கடந்த சில நாட்களாக நிலவும் மின் வெட்டுக்கு காரணம்.
இப்பற்றாகுறையை ஈடுகட்ட, வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சீராக்க குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களின் அடிப்படையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பழுதடைந்த மின் நிலையங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மின் திட்டங்களை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. 2012ம் ஆண்டு ஆகஸ்ட் முதல், தமிழகத்தில் மின்வெட்டு அறவே நீக்கப்படும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில், ஆந்திராவில் நடைபெறும் தெலுங்கானா தனி மாநில போராட்டத்தால், சிங்கனேரி நிலக்கரி சுரங்கத்தில் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், ராமகுண்டம் அனல்மின் நிலையத்தில் 1,100 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி குறைந்துவிட்டது. இதன் விளைவாக, ராமகுண்டம் அனல் மின் நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மின் அளவில் பாதி அளவு தான் தற்போது கிடைக்கிறது.
அதுபோல், ஒடிசாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், தால்ச்சர் அனல் மின் நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மின்சார அளவும் குறைந்துள்ளது. மேலும், நெய்வேலி அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம், கர்நாடகத்தில் உள்ள கைலா அணு மின் நிலையம், ஆந்திர மாநிலம் சிம்மாத்ரி அனல் மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவும் குறைந்துள்ளது. தற்போது காற்றின் அளவு குறைந்துவிட்டதால், தமிழகத்துக்கு காற்றாலை மூலம் பெறப்படம் மின்சாரமும் வெகுவாக குறைந்துள்ளது.
இவற்றின் காரணமாக, கடந்த 4 நாட்களில் கிடைக்க வேண்டிய மின்சார அளவில், 1,026 மெகாவாட் குறைந்துவிட்டது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் எதிர்பாராத மின்தடை ஏற்பட்டு வருகிறது.இந்த 1,026 மெகாவாட் மின் பற்றாகுறையை உடனே ஈடுசெய்தால் தான் தற்போது நிலவும் திடீர் மின் தடையை போக்கி நிலைமையை சீர் செய்ய இயலும்.
ஆந்திராவில் நடக்கும் தெலுங்கானா போராட்டம், ஒடிசா வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட மின் உற்பத்திக் குறைவு நீங்கி, மீண்டும் வழக்கமான மின் உற்பத்தி கிடைக்கும் வரை, தமிழக மின் பற்றாக்குறை போக்க, வெளிச் சந்தையில் இருந்து மின்சாரத்தை வாங்க உத்தரவிட்டுள்ளேன்.ந்த உத்தரவுப்படி, தமிழ்நாடு மின்சார வாரியம், வெளிச் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும். வெளிச் சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரம் மூலம் தற்போதுள்ள பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
Leave a Reply