புதுடில்லி:கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில், சி.பி.எஸ்.இ., கல்வி முறையில், இந்த இரண்டு பாடத்திற்கும், செயல்முறை கற்றலை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.பெரும்பாலான மாணவர்கள் கணக்கு பாடத்தில் தோல்வியடைவதை தவிர்க்க, பள்ளிகளில் செயல் முறைக் கற்றலை அறிமுகப்படுத்துமாறு, சி.பி.எஸ்.இ., குழு கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்காக, கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் செயல்முறைக் கற்றலை அடிப்படையாக கொண்ட புத்தகங்களை, சி.பி.எஸ்.இ., குழு தயாரித்துள்ளது. இந்த புத்தகங்களை கொண்டு, வகுப்புகளில், கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களை மிக எளிதாகவும், மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், பாடம் நடத்த, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செயல்முறைக் கற்றல் புத்தகங்கள், தேசியளவிலான பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த செயல்முறை கல்வி, மாணவர்கள் அடிப்படை கணக்குகளை எளிதாகவும், சிறப்பாகவும் கற்க உதவுவதோடு, அவர்கள் மத்தியில் பாடம் தொடர்பான அச்சத்தை அகற்றவும் உதவும் என சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போன்ற செயல்முறை கற்றல் புத்தகம், எட்டாம் வகுப்பிற்கான அறிவியல் பாடத்திற்கும் உருவாக்கப் பட்டுள்ளது. ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பிற்கான, அறிவியல் பாடத்திற்கான செயல்முறைக் கற்றல் புத்தகம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply