காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு நினைவு நாள் விழாவில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசிடமும் நேரில் இது குறித்து வலியுறுத்தப்பட்டது. நேற்று முதல்வர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசியபோதும் இது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இலங்கைத் தமிழர்களின் பிறப்புரிமையான யாழ்ப்பாணம் தமிழர் பகுதியாக உருவாக்கப்படுவதை ஒவ்வொரு தமிழரின் லட்சியமாக இருக்க வேண்டும்.
இராஜராஜசோழன், பல்லவர்கள் ஆட்சி காலங்களில் முல்லைத்தீவு வரை முழுமையான தமிழர்களின் பகுதியாக உருவாக்கப்பட்டதை வரலாற்றுச் சான்றுகள் எடுத்துச் சொல்லுகின்றன. 7 லட்சம் ஈழத்தமிழர்களில் சுமார் 2 லட்சம் பேர் தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர்.
மேலும் சுமார் 2 லட்சத்திற்கு மேல் உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழ்கின்றனர்.
இம் மக்களின் சொத்துக்கள், வீடுகள், விவசாய நிலங்கள், வியாபாரம், தொழிற்கூடங்கள், கல்விக்கூடங்கள் போன்றவை அவர்களுடைய பொறுப்பிலேயே மீண்டும் நடத்தப்பட வேண்டும்.
இதில் எவ்வளவு மக்கள் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வராமல் அவர்கள் இருக்கின்ற நாடுகளிலேயே வாழ்கிறார்களோ அந்த அளவிற்கு ராஜபக்சவுக்கு மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகமாகும்.
அந்த அளவிற்கு சிங்களவர்களை ஈழப் பகுதியில் குடியமர்த்த முயற்சிப்பார்கள். இதை கவனமாக கொண்டு இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களில் வீட்டிற்கு ஒருவரேனும் ஈழ நாட்டிற்கு சென்று தமது உரிமையினை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் அதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சியுடன் இறங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
Leave a Reply